பூ மார்க்கெட்டில் பூஜைக்கு பூக்கள் வாங்கவென வந்த மௌலியின் கையில் ஏற்கனவே சந்தைக்கு சென்றுவிட்டிருந்த சான்றாக, கட்டைப்பையில் ஜம்பமாக இருந்தன காய்கறிகள்.
"என்ன சார், வீட்டிலே என்ன விசேடம்?", என நன்கு பழகிய பூக்காரர், மௌலி கேட்ட பூக்களை, பாலிதீன் கவரில் குவித்தார். லேசாக புன்னகை பூத்தவர், "என் பிறந்த நாள்'ப்பா.", என்றதும் ஆனந்தமாக சிரித்தவர், அன்று தான் வந்திறங்கிய புதிய வகை மலரையும் தனது பிறந்தநாள் பரிசாக சேர்த்தே கட்டிக்கொடுக்க, விடைப்பெற்றார்.
இன்றோடு அவர் இவ்வுலகம் வந்து எழுபதாண்டு காலம் ஆகிவிட்டதாம். மௌலிக்கு அதன் மீதெல்லாம் நாட்டமில்லை.
மணி ஏற்கனவே ஆறு முப்பதை நெருங்கிவிட்டிருந்தது. தனது ஹோண்டா ஆக்டிவாவில் பையை முன்னே வைத்தவர், வண்டியை உயிர்ப்பித்தார்.
வழிநெடுகிலும் மனைவியோடு இது போல் சென்று வந்த பயணங்கள் நினைவு வந்தது.
திருமணமான புதிதில், மனைவி தாரணியோடு புல்லட்டில் ஊர்வலம் வருவார். கனகாம்பரம், முல்லை போன்ற பூக்கள் என்றால் மனைவிக்கு இஷ்டமென தினமும் வாங்கிவிடுவார். மாதவிடாய் நாட்களில் கூட பூ வைத்து, அவரது நீண்ட கூந்தலை பின்னலிட்டு அழகுப்பார்ப்பார்.
மௌலிக்கு அப்போது இயக்குநர் ஆகவேண்டுமென்பது ஆசை, ஆசை என்றால் பேராசை. தாரணி பள்ளி டீச்சராக இருந்தார். இருவரதும் ஏற்பாட்டு திருமணம் என்றால் யாரும் நம்பமாட்டார்கள், அத்தனை புரிதல் அவர்களிடம்.
திருமணம் முடித்து ஒரு ஆண்டு தொடங்கியபோது ஒரு மாலை வேளை அது.
"வெளியில போலாமா?", தனது கதைகள் ரிஜெக்ட் ஆன காரணம் புரியாமல் தவித்துக்கொண்டிருந்த மௌலியிடம் தாரணி கேட்டார்.
வேலை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டையும் மௌலி ஒரு போதும் குழப்பிக்கொண்டதில்லை. அவ்வாறு அவர் செய்திருந்தால் இருவருமே ஒருவர் மற்றொருவரை நினைத்து எரிச்சலுற்றிருப்பர். தாரணிக்கு கணவனிடம் பிடித்த விடயமும் அதுவே.