அந்தகார இருட்டை நான்கு சுவருக்குள் அடைத்து வைத்திருந்தது அவ்வறை. நிலவொளியோ, சூரியவொளியோ போராடிராலும், வர முடியாத அளவிற்கு இருட்டின் ஆக்கிரமிப்பு அடர்ந்திருந்தது.
அது அதிகாலை வேளையாக இருக்கலாம், எலியோ, பாம்போ வர எதுவாக அமைக்கப்பட்டிருந்தது போன்ற சிறு ஓட்டை வழி, மெலிதான இசை போல், வெளிச்சம் கசிந்தது... யானைக்கு சோளப்பொறி போல்!
அங்கிருந்த ஒரு கயிற்று கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தவள், தூக்கத்திலே புரண்டுப்படுக்கிறேன் பேர்வழி கீழே விழ, பெரும் பாதளத்துள் விழுந்த பயத்தோடு, மிரட்சியோடு விதிர்விதிர்த்து எழுந்து நின்றாள்.
லப் டப் ஓசை, சடுகுடு வண்டிக்கு இணையாக கேட்டது!
சில நிமிடங்களில் தன்னை நிதானித்தவளுக்கு, இருளுக்கு பழகிய கண்கள் என்பதால் எவ்வித அலட்டலோ, பயமோ இல்லாது, அந்த சிறு துவாரத்தின் அருகே அமர்ந்தாள்.
எந்தளவு வெளிச்சம் கசிந்ததோ, அதே போல் குளிர்காற்றும் அவளை வருடியது. அதை சுவாசித்தவளுக்கு கண்கள் கலங்கியது.
இன்றோடு ஒருவாரம் கடந்திருக்கலாம். அவள் நினைத்தது, நடத்த நினைத்தது. முக்கியமாக அவளது சாம்!
அவனிடம் சொல்லிவிட்டு வந்தாளே!
"போகாதடி! எனக்கு கண்ண கட்டி காட்டில விட்ட மாதிரி இருக்கு.", என அவளது மடியில் முகம் புதைத்தது கூறியவனை இடையோடு அணைத்துக்கொண்டாள்.
"உனக்காக நான் திரும்ப வருவேன் சாம்! அதுவரை நீ இங்கயே இரு. எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கு!", என சொல்லும்போது கூட அரைமனதோடு தான் கூறினாள்.
உள்மனம் அவனை பிரியாதிரு என ஏக்கத்தில் கதறியது. அதை பொருட்படுத்தாமல், கொடுத்த வாக்கினை காப்பாற்ற வந்தாள். பலன்! இப்போ யாரிடமோ மாட்டியிருக்கிறாள், சிக்கிக்கொண்டாள்.
இதோ இந்த சிறு துவாரம் வழியாக வரும் காற்று, அவனது மூச்சுக்காற்றுக்கு இணையாக அவளை வருடியது. அதன் ஒளி அவனது கண்ணின் மணியாக மின்னியது. அந்த அறையின் மொத்த இருளும் கூட அவனது பெயரை முணுமுணுப்பதாக தோன்றியது.