"ஹலோ மிஸ்டர்.நளன்! உண்மையாவே நீங்க தான் இந்த தனுவோட அப்பாவா?", என்ற தனுவை திகைத்து பார்த்தார்.
"என்ன பேசுறோம்னு புரியுதா உனக்கு? ஒரு பொண்ணு தன்னை பெத்தவங்கள பாத்து கேக்குற கேள்வியா இது?", என ஆவேசமாக கேட்டார். அதில் ஒரு நிமிடம் பயந்து தான் போனாள், கொஞ்சம் அதிகம் பேசிவிட்டோமோ என்று கூட தோன்றியது.
"தனு!", என அமைதியாக வெற்றுத்தரையில் அமர்ந்தேவிட்டார் பெருமூச்சோடு.
"இல்ல நான் வேணும்னே கேக்கல, ஒரு கோபத்துல...", என மனம் வருந்தியவளாக, "சாரி!", என அமைதியாகினாள்.
நளன் முகம் இருண்டேவிட்டது, ஒருவித கவலையான நிலையோடு அவளை கண்டார்.
"மூஞ்ச இப்டி வைச்சிக்காதீங்க பாக்க முடியல.", என்றாள்.
"உனக்கு இங்க இருக்குறது பிடிக்கலையா?", என்றார்.
"ரொம்ப சீக்கிரமே கேட்டுட்டீங்க!", என்றவள், "முதல என்ன வேலை பாக்குறீங்க நீங்க? சம்பளம் என்ன?", என கோபமாக கேட்டாள்.
"நான் மதுரத்த கல்யாணம் செஞ்ச பிறகு நல்ல வேலையில தான் இருந்தேன். அவ போன பிறகு வேலைக்கு போக பிடிக்கல. ஒருதடவ குடிச்சிட்டு வேலைக்கு போய்... அதனால ப்ளாக் மார்க் ஆகிடுச்சு.", என பழைய கதையை துவங்க, அதில் கடுப்போடு, "இப்போ என்ன வேலை?", என அழுத்தமாக கேட்டாள்.
"ஒரு ப்ரைவேட் ஸ்கூல்ல க்ளர்க்கா இருக்கேன்.", என்றவர், வருமானம் பற்றியும் கூறிவிட்டு, "இப்போ வந்தவர்கிட்ட எப்பவோ வாங்கின கடன் அது! அப்போ என்கிட்ட சுத்தமா காசு இல்ல, உனக்கு அப்போ உடம்பு சரியில்ல, அதனால சின்ன தொகையா வாங்கினேன், அப்றம் ரெண்டு மூணு தடவ வாங்கி, இப்போ லட்சத்துல வந்து நிக்கிது.", என சோர்வோடு கூறியவர், "உன்ன எப்டி கரை சேர்க்க போறேன்னு தெரியல.", என கவலையோடு அவளை கண்டார்.
"வாசல்ல க்யூவுல மாப்பிள்ளைங்களா நிக்குறாங்க, ஒருத்தன பிடிச்சு கல்யாணத்துக்கு மண்டபம் பாருங்களேன்.", என்றாள் கடுப்பான புன்னகையோடு.