வையாவி கோப்பெரும் பேகன்
சங்கர் சீனிவாசன்
"அம்மா கண்ணகி... உனக்காவது உன் கணவனை இடித்துரைக்க இந்தப் பரணன் கிடைத்தான். பின்னொரு காலத்திலே சிலப்பதிகாரத்திலே ஒரு கண்ணகி வருவாள் பார். அவள் கணவன் கோவலனும் பரத்தையரே கதி என்று கிடப்பான். அந்தக் கண்ணகி தன் செல்வத்தையெல்லாம் அவன் பெயர் சொன்ன யாவருக்கும் அள்ளி வழங்கி எல்லாம் இழந்து, கணவன் மனந்திருந்தியபின் பாண்டிநாடு கூட்டிச் செல்கிறாள். ஆனால் பாவப்பட்ட கோவலன் அங்கு போய் திருட்டுப்பட்டம் பெற்று மாளப் போகிறான்.
அநீதி இழைத்த பாண்டிநாட்டை எரிக்கப் போகிறாள் கண்ணகி. இது தேவையா? கணவனே கண்கண்ட தெய்வம் என்று உளறியோர் கூற்றை நம்பிய மடந்தை அவள். அவனை இவளே இடித்திருந்தால், உரைத்திருந்தால், உதைத்திருந்தால் இது நடக்குமா? இல்லை மதுரை தான் எரியுமா? புலவன் இளங்கோவுக்கு ஒருப் பெருவேலை காத்திருக்கிறது. தவறிழைத்தவனை அய்யோ பாவம் என்றும், தவறுசெய்யக் காரணமாக இருந்தவளை கற்புக்கரசி என்றும் எழுதித் தொலைக்கப் போகிறான்" பெருமூச்சு விட்ட பரணர் மேலும் தொடர்ந்தார்.
"ஆனால் உன் கணவன் பேகனோ அன்புக்குக் கட்டுப்பட்டவன். நாடாளும் வேந்தன், அரசவை நீங்கி பரத்தை வீடு புகுதல் தகுமோ? எப்படியோ அவனை உன்னிடம் சேர்த்துவிட்டேன். வருகிறேன்" என்ற பரணரை விடைகொடுத்து அனுப்பினாள் கண்ணகி.
************
அரண்மனை விட்டு வெளிவந்த பரணர், காத்திருந்த இரு காவலர்களோடும் பொதினிமலை முருகனை வணங்கி, வையாவியின் வீதிகளில் நடக்கத் துவங்கினார்.
பொதினிமலையைப் பிற்காலத்தவர் பழனிமலை என அழைப்பர். ஆவியர்குலத் தோன்றல் பேகனின் சிற்றரசை வையாவி என்பார் சிலர். வையாபுரி என்பார் சிலர். ஆவியர் குலத்தின் ஆவினன்குடி என்பார் சிலர். குறிஞ்சிநிலத்துக் குறவர்களின் முதல் கடவுள் பொதினிமலை முருகன். தங்கள் இனத்து வள்ளியின் மணாளனாயிற்றே?
YOU ARE READING
வையாவி கோப்பெரும் பேகன்
Historical Fictionபரத்தையர் வீடு தங்கிய பேகனை, கபிலர் மீட்டு வந்த புறநானூற்று கதை