இரவின் மொழி தேடி அலைகிறேன்….
குருட்டு ஆந்தைகளின் கூவல்களும்
படபடத்து அமரும் குயில்களின் ஓசைகளும்…காய்ந்த பனை ஓலைகளின் சரசரப்புகளும்
காற்று உழுப்பி மொத்தென்று வீழும் பனம்பழமும்..அதற்கென காத்திருந்து பொறுக்கியெடுக்க சண்டையிட்டுக் கொள்ளும் இரு கிழவிகளின் சம்பாஷனைகளும்...
சாந்தமாய் மிதந்து வந்து காதேறும் நேபாள கூர்க்காவின் விசில் சத்தமும்…
பெட்டை நாய்களை வெறிக் கொண்டு துரத்தும் ஆண் நாய்களின் காம மூச்சுக் காற்றும்…
கயிற்றுக் கட்டிலில் சுருட்டுப் புகைத்து சலி அடைத்து அடி வயிற்றிலிருந்து கிளம்பும் கனத்த இருமலும்…
இருமலின் துள்ளலில் பாரம் தாளாமல் ஈய்ந்து அகல விரியும் மர கட்டில் கால்களின் உரசல்களும்…
வெறிச்சோடிக் கிடக்கும் புழுதி நிறைந்த சாலையின் தூக்கத்தைக் கலைத்து ஓடும் இரு சக்கர வாகனத்தின் ஓட்டமும்…
உடம்பெல்லாம் கடித்து மேய்ந்து விட்டு காதருகே பறந்து போய் வருகிறேனென ரீங்காரமிடும் கொசுக்களும்…
அமைதியை கிழிக்கும் இத்தியாதி இத்தியாதிகளும் இரவின் மொழியை பறைசாற்றுகின்றன…
கவிஞனாக நான்.