உங்களுக்கு புல்லட் பிடிக்குமா?
அடுத்தத் தெருவில் இருந்தாலும் பார்க்கக்கூட அவசியமில்லாது டப் டப் டப் டப் ஒலியிலேயே தன் வருகையை ஆகாத்தியமாய் அறிவித்துவிடும். கண்களில் பட்டுவிட்டால், மறையும் வரை வேறெதையும் கவனிக்கவிடாது. அந்த புல்லட் தான்.
நான்கு வயது எனக்கு ராயல் என்ஃபீல்ட் என்ற பெயரை முழுதாய் மனப்பாடம் செய்து சொல்வதற்குக் கடினமாய் இருந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் அடிக்கடி மறந்து போய் கொண்டே இருக்கும். அதனாலேயே, அந்த பெயர் மீது அவ்வளவு பிடித்தமில்லை.
ஆனால் புல்லட் என்றால் இத்துனூண்டாய், இலகுவாய் இருந்து நினைவில் சேர்ந்து கொண்டது—துப்பாக்கியில் இருப்பதென்பது தெரிந்ததனால் எளிதாய் மனதில் நின்றுவிட்டது.
சிறுவயதில் மனதில் பதிந்தவையின் மீதுண்டாகும் மோகம் எத்தனை வயதானாலும் போகாது. ஆனால் அதுவே இத்தனை வயது வரை இருந்துவிட்டால் அது மோகமாகாதே. காதலாகிவிடுமல்லவா!
இந்த புல்லட் மீதும் அப்படித்தான்.
முதன்முறையாக பார்த்தது மிக மிக அருகாமையில்; அப்பாவின் பஜாஜ் சேட்டக்கில் முன்னாடி நின்று கொண்டிருந்த போது.
காணாததை கண்டவள் போல் (அதுவே முதல் முறை என்பதால், நிஜம்போல் காணாததை கண்டவள் தான்) பார்த்ததை அப்பா கவனித்திருந்தார்.
அந்த சிகப்பு புல்லட்டை கண்களில் ஆராய்ந்த சுவாரஸ்யம் அப்பா சொன்ன அந்தப் பெயரை முழுதாய் உள்வாங்க விடவில்லை. எதோ சொன்னார்.. என்னவென்று சொன்னார். பிடித்து வேறு போயிற்று.. பெயர் தெரிந்து கொள்ள வேண்டுமே!
வேண்டினேன். "அது பேர் என்னப்பா?"
"புல்லட் டா. நம்மகிட்ட இருந்துதே!"
"நம்ம கிட்ட இருந்துதா?" அப்பாவிடம் இருந்ததாமே. அந்த பிரம்மாண்டத்தில் இருந்தே வெளிவரவில்லை அதற்குள் அடுத்தது.
"ஆமாண்டா. அப்பாகிட்ட இருந்தது." இப்போது அம்மாவும் சேர்ந்து கொண்டார்.
YOU ARE READING
கதை கதையாம் காரணமாம்
Short Storyகதை கதையாம் காரணமாம்னு குழந்தைகளுக்கு சொல்றதுலேந்து, காரணம் இதான் கதை இனிமேல் தான் எழுதணும்னு கமல் ஹாசன் சொல்றது வரை... அப்பப்போ குட்டி குட்டி நிஜம் கலந்த கதைகள்.