உணர்வுகளை ஏந்திய வரிகள் அழகானவை; ஆபத்தானவை. ஆம், நம் உணர்வுகளுக்குள் புகுந்து நம்மைத் திசை திருப்பக்கூடியவை.
பதின்ம வயதின் ஆரம்பத்திலே அவளுக்கு அந்த நாவல்களின் அறிமுகம். முதன் முதலாக தோழியொருத்தியின் தூண்டுதலினால் சும்மா படித்துப் பார்த்தவளுக்கு அவளது கோளாறு நிறைந்த வயதும் அலைபாய ஆரம்பித்திருந்த மனதும் சேர்ந்தே கைகொடுக்க, திடீரென்று ஆர்வம் வந்துவிட்டது அவளுக்கு,
வாசிப்பில்!
அப்பப்பா, என்னே கதை.. என்னே வரிகள்.. என்னே உணர்வுகள்..
வாசிப்பு என்ற போர்வைக்குள் அவள் தன்னுடன் திணித்துக் கொண்டதெல்லாம் புலன்களடக்கப் பெயர்பெற்ற 'காதலை' கணக்கின்றிப் போதிக்கும் நாவல்களை மட்டுமே..
கைமாறிக் கைமாறித் தன்னிடம் வந்து சேரும் கற்பனாக் காதல் சரிதங்களுள் ஊறிப்போனாள் ரைஹானா!
தன்னையறியாமலே யதார்த்த உலகினிருந்தும் தப்பிச் சென்றவளின் அகத்துக்குள்ளே அவளுக்கோர் உலகம்; அவளுக்கொரு காதல்; அவளுக்கோர் அவன். அக் காதல் காட்டினுள் கண்ணைக் கட்டிக்கொண்டு திரிந்தவளைக் கட்டவிழ்த்துவிட யாரும் வரவில்லை போலும்.
பதின்மம், ஆசை ஆகாசம்தொட்ட பகல்க்கனவுகளுடனே கையசைத்து மெதுமெதுவாய் தூரே சென்றுகொண்டிருக்க, படிப்புப் படகு உடைந்து மூழ்குவது கூடக் கருத்திலில்லை அவளுக்கு, அவள்தான் சில ஆண்டுகளாக வேறு ஆசைகளை முடிந்து முடிந்து வைத்திருந்தாளே. படிப்பெதற்கு?
அவள் வாழ்க்கை நாடகத்திலும் திருமண அத்தியாயம் வந்தது.
கனவுகள் கட்டிடவா அவளுக்குச் சொல்லித் தர வேண்டும்? வீட்டிற்குள் பறந்தாள், மேகத்தில் நடந்தாள், கடலுக்குள்ளும் திரிந்தாள்.
"மாப்பிள்ளைட்ட கொண்டு வார மஹர் காச புஸ்தகமாவே எடுத்துட்டு வரச் சொல்லுவோம்"
வீட்டினர் சீண்டும்போது பெருமிதம் அவளுக்கு. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவள் எப்பொழுதும் புத்தகமும் கையுமாகத் திரிபவள் என்பது மட்டுந்தான்.
YOU ARE READING
கதைச் சொட்டுக்கள்
Short Story#1 சிறுகதைகள் என் பேனா உதிர்த்த சின்னஞ் சிறு கதைச் சொட்டுக்கள் சில..