28. விழகும் திரை

1.1K 71 29
                                    

"அதுவும் சரி தான். நானும் இதை அவங்க கிட்ட சொல்லலை. நீங்களும் தெரியாம பார்த்துக்கோங்க." என்ற ரவி,

"சரி அப்போ நான் கிளம்புறேன் அங்கிள்." என்று சொல்லி விடைப்பெறவும், வாசலில் நின்றிருந்த ஆதிரா வேகமாய் பக்கத்து அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாள்.

இவ்விருவரின் உரையாடலும் ஏதோ மர்மமாய் இருக்கவும், ஆரவ் மாயாவிடமிருந்து அப்படி எதை இவர்கள் மறைக்க நினைக்கிறார்கள் என்ற கேள்வியோடு குறுக்கே நெடுக்கையும் நடந்தவளுக்கு சிறிது நேரத்திலேயே ராகவும் போனில் பேசிக்கொண்டே அறையைக் கடந்து செல்வது கேட்கவும் மூடிய அறையிலிருந்து வெறும் தலையை மட்டும் நீட்டி எட்டிப்பார்த்தவள் ராகவ் சென்று விட்டதை உறுதிப்படுத்திக்
கொண்டு, மெல்ல பூனை நடைப்போட்டு அவரது அலுவலக அறையை நெருங்கியவள் கதவை தள்ளியவுடன் அது திறந்துக் கொள்ளவும், தனது அதிர்ஷ்டத்தை எண்ணி மனதுக்குள் நகைத்துக்கொண்டவள் உள்ளே நுழைய, அங்கு மேசையில் திறந்திருந்த மேனிக்கு இருந்த லேப்டாப் அவளது கவனத்தைத் திருடியது.

இங்கு ராகவின் அறையிலிருந்து வெளியேறிய ரவி, வீட்டை விட்டு வெளியேற எத்தனிக்கவும் ஆரவ் உள்ளே நுழையவும் சரியாய் இருக்க,

"டேய் ரவி எப்ப வந்த?" என்றான் ஆரவ் முகம் நிறைந்த புன்னகையுடன்.

"இப்போ தான் டா. அம்மா நீ எங்கேயோ வெளில போயிருக்குறதா சொன்னாங்க. அதான் கிளம்பிட்டேன்." என அவன் கூறிய நேரம் அவர்களை நெருங்கிய சுமித்ரா ரவியின் பதிலைக் கேட்டு குழப்பத்துடன் பார்க்க, அவரைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பு உதிர்த்து வைத்தான் ரவி.

"சரி நீ உக்காரு. நான் போய் ப்ரெஷ் ஆகிட்டு வந்துடுறேன்." என ஆரவ் சொல்லி நகரவும் சுமித்ரா எதையோ கேட்க வாய் திறக்க, அதுக்கு முன் சோஃபாவில் போய் வேகமாய் அமர்ந்துக்கொண்டான் ரவி.

'அய்யோ சுமித்ரா ம்மா வேற சந்தேகமா பார்க்குறாங்களே.. ஆரவ்ட்ட எதாவது மாட்டி விட்டுட்டா நான் என்ன பண்ணுவேன்.. கடவுளே காப்பாத்து.' என்றவனது வேண்டல் கடவுளுக்கு கேட்டு விட்டதோ என்னவோ, அந்நேரம் பார்த்து சரியாய் அர்ஜுனும், திவ்யாவும் அவனிடம் வந்து சேர்ந்தனர்.

விண்மீன் விழியில்..Where stories live. Discover now