வலியின் மொழி மௌனம்

246 10 4
                                    

தண்டவாளத்தின் மீது சிவப்பு கம்பளிப்பூச்சியாய் அதிவேகத்தில் ஊர்ந்து கொண்டிருந்தது அனந்தபுரி எக்ஸ்பிரஸ். ஒருவழியாய் வாஞ்சி மணியாச்சியைக் கடந்து திருநெல்வேலியை நோக்கிச் சீறிப் பாய்ந்து சென்று கொண்டிருந்த அப்புகைவண்டியில் முதல் வகுப்பு பெட்டியில் அமர்ந்திருந்த எனக்கு எப்போதடா நெல்லை சந்திப்பு இரயில் நிலையம் வருமென்ற ஆர்வம். என் அருகில் அமர்ந்திருந்த அம்மாவுக்கு இப்போதைய கவலை நெல்லை சந்திப்பில் உள்ள சாந்தி ஸ்வீட்டில் கூட்டம் இருக்கக் கூடாதே என்பது தான்.

அது என்னவோ அம்மாவுக்கு அந்தக் கடை அல்வாவின் மீது அலாதிப்பிரியம். இருட்டுக்கடை அல்வா கூட அவ்வளவு ருசியில்லை என்பார் அடிக்கடி. எப்போது திருநெல்வேலி வந்தாலும் சாந்தி ஸ்வீட்டின் அல்வாவும் மிக்சரும் எங்களின் மூட்டை முடிச்சுகளில் கட்டாயம் இடம்பெறும்.

அல்வா எனும் போது தான் ரம்யாவின் நினைவு வந்தது. அவளும் என் அன்னையைப் போன்றே அல்வா என்றால் உயிரை விடும் ரகம். முன்பெல்லாம் நாங்கள் திருநெல்வேலியிலிருந்து திரும்பும் தினத்துக்காகக் காத்திருப்பாள் அவள். அலுவலகத்திற்குச் சென்று அவளிடம் சாந்தி ஸ்வீட்டின் அலுமினிய நிறத்தினாலான பொட்டலத்தை நீட்டினால் அவள் முகம் பூவாய் மலரும்.

அப்படி இருந்தவள் தான் இன்று ஓய்ந்து போனவளாக, வாழ்வையே வெறுப்பவளாக வலம் வருகிறாள். இதையெல்லாம் எண்ணும் போதே எனக்குள் முணுக்கென்று ஒரு வலி உண்டாகும். ஒரு பெண்ணுக்கு இவ்வாறு கூட நடக்குமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவளது வாழ்வில் தினந்தோறும் சம்பவங்கள் நடந்தேற அதைக் கொட்டும் வடிகாலாக அவள் எண்ணியது என்னை மட்டுமே.

அவ்வபோது எங்களின் பேச்சில் அம்மாவும் கலந்துகொள்வார். ஆனால் முடிவில் "ஆம்பளைனா முன்ன பின்ன இருக்கத் தான் செய்வாங்க ரம்மி... ஒரு புருசனோட ஆசையை நிறைவேத்துறது பொண்டாட்டியா உன் கடமை... அதுக்கு ஏன் இவ்ளோ வருத்தப்பட்டு வேதனையோட பேசுற?" என்ற வழமையான அறிவுறுத்தலுடன் ரம்யாவை வழியனுப்பி வைப்பார்.

வலியின் மொழி மௌனம்Where stories live. Discover now