🧡 கன்னல் 10

1.5K 62 11
                                    

ஒரு பெண்ணின் அறைக்கதவை அர்த்த ராத்திரி நேரத்தில் எப்படி தட்டுவது, அவள் இந்நேரத்தில் ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டால் அதற்கு என்ன காரணத்தை சொல்வது என்று யோசித்தபடியே கீழிறங்கி அவள் இருந்த தளத்தை அடைந்தவனுக்கு நீ இந்த மாதிரியான யோசனைகளை எல்லாம் மேற்கொண்டிருக்கவே தேவையில்லை என்று சொல்லும்படியாக அவளுடையதாக ஒதுக்கப்பட்டிருந்த அந்த அறையின் கதவு திறந்தே இருந்தது. ராமுத்தாயி குரலில் கோபத்துடன் அவளது அன்னையை அலைபேசியில் கடித்துக் குதறிய படி இருந்தாள்.

"ஊப்ஸ்..... குக்கர் வெயிட் இப்ப எதுக்காக விசில் அடிக்கிறான்னு தெரியலயே?" என்று நினைத்த ஜேவிபி, அவளது கோப முகபாவனையை பார்த்து சிரிப்புடன் தனது ட்ராக்ஸிற்குள் கைகளை நுழைத்துக் கொண்டு அவளது உரையாடலின் மூலம் அவளது கோபத்திற்கான காரணத்தை தெரிந்து கொள்வதற்காக நின்று கொண்டிருந்தான்.

"சரி.... சரி! நீ சொல்றதெல்லாம் வாஸ்தவந்தேன்! நாந்தான் தூக்கக் கலக்கத்துல போன அமத்திட்டு படுக்கல; அந்தப் பக்கத்துல நீயாவது உன் போன அமத்தியிருக்கலாமுல ஈசு? குத்து மதிப்பா மூணு மாசம் இங்கணக்குள்ள இருப்போமுனு நெனச்சு ஊருல இருந்து வரும் போது நம்ம ஆரிஸ் அண்ணா கடையில 598 ரூவாய்க்கு டாப்அப்பு பண்ணிட்டு வந்தேன்; உங்கிட்ட வாங்குன சிறுவாட்டு காசையெல்லாம் பத்துரப்படுத்தி பொத்தி பொத்தி வச்சுருந்ததுமா....... ராத்திரியில நாம கடைசியா பேசிட்டு வச்சதுல இருந்து போன்ல கால் ஓடிட்டு இருந்துருக்கும் போலிருக்கு; நல்ல வேள அரைகொறையா தூக்கத்துல பொரண்டு படுக்கறப்போ இப்பவாச்சு போன கவனிச்சேன்; 502 ரூவாதேன் பேலன்ஸூல இருக்கு! 96 ரூபா உங்காம, திங்காம வெட்டியா மொபைல் கம்பனி காரனுக்கு போயிருச்சு ........ ஒனக்கும் எவ்வளவு ரூபா போச்சுன்னு போன்ல பாரும்மா!" என்று சொல்லி அவள் மறுபடி அழுகைக்கு தயாராக ஜேவிபிக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

இரவில் அம்மாவும், பெண்ணும் பேசியிருக்கிறார்கள். பேசிக் கொண்டே இவள் உறக்கத்திற்கு சென்று விட்டதால் அலைபேசியில் இவளது பேலன்ஸில் சற்று பணம் குறைந்து விட்டது! இதற்குத்தான் அவ்வளவு பெரிய கத்தலும், இப்போது நடந்து கொண்டிருக்கும் காரசாரமான பேச்சுக்களும்!

தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔Where stories live. Discover now