"நேத்து நைட்டு அப்பா என்ன சொன்னாரு, அங்கிள்?"
நான் ஒரு தடவை அனிதாவைப் பார்த்துவிட்டு, மிருதுவான குரலில் கேட்டேன், "அவசியம் நீ தெரிஞ்சுக்கணுமா?"
அவள் கீழே ரோட்டைப் பார்த்துக்கொண்டே பேசினாள். "நான் தெரிஞ்சுக்கலாம்னு அங்கிள் நினைச்சா."
நாங்கள் பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தின் வெளியே இருந்த நடைமேடையில் உட்கார்ந்திருந்தோம். கீதா எங்களுடன் வரவில்லை. தாமதமாக காலை உணவு முடித்துக்கொண்டு, நெய்வேலியிலிருந்து புறப்பட்டோம். அங்கே வந்து சேர்ந்தபோது, ஆசிரமம் மதிய உணவு இடைவேளைக்காக மூடப்பட்டிருந்தது. இருவருக்குமே பசி இல்லை. அதனால், ஆசிரமத்தின் வெளியே இருந்த நடைமேடையில் உட்கார்ந்து கொண்டோம்.
சாலையில் ஆங்காங்கே நின்றுகொண்டு மக்கள் தங்கள் மொபைல் போனில் படம் எடுத்துக்கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். சாலையின் இருபுறமும் மரங்கள் நின்று சூரிய ஒளி புகாதபடி தடுத்து நிழல் தந்துகொண்டிருந்தன. புத்துணர்வூட்டும் காற்று வீசியது. பெரும்பாலும் குடும்பத்துடன் வந்திருந்த பக்தர்கள் சாலையில் ஆங்காங்கே உலவிக்கொண்டிருந்தனர்.
நான் அனிதாவைத் திரும்பிப் பார்த்தேன். அவள் கிளிப்பச்சை நிறத்தில் சேலை அணிந்திருந்தாள். "கார்த்திக்ட்ட என்னப் பேசச் சொன்னாரு."
"அதுக்கு அங்கிள் என்ன சொன்னாராம்?"
"உன்னோட சம்மதம் இல்லாம கார்த்திக்ட்ட உன் அங்கிள் பேசுவாருன்னு நினைக்கிறியா?"
அவள் சாலையைப் பார்த்துத் திரும்பினாள். கண்களில் ஈரம் கசிந்திருந்ததோ?
அவள் சாலையின் எதிர்ப்புறத்தில் இருந்த காலணி வைக்கும் இடத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தாள்.
பார்வையை அங்கிருந்து அகற்றாமல், சின்னக் குரலில் பேசினாள். "அவன ரொம்ப நேசிச்சேன் ... நான் வேலைக்குப் போறது அவனுக்குப் பிடிக்கல. அவனுக்காக என் வேலைய ரிசைன் பண்ணுனேன். வெப் டிசைனிங் கோர்ஸ் ஒண்ணு பண்ணனும்னு நினைச்சேன். அவனுக்கு அதுல விருப்பம் இல்லன்னு விட்டுட்டேன். பிரைட் கலர் ஸாரி உடுத்தறது அவனுக்குப் பிடிக்கல. அவனோட இஷ்டப்படி என்னய மாத்திக்கிட்டேன். பக்கத்து வீட்டுக்காரங்களோட பேசறது அவனுக்குப் பிடிக்கல. அவங்களோட அரட்டையடிக்கிறதை எல்லாம் நிறுத்திக்கிட்டேன். சாப்பாடு, டிரெஸ், ஃபர்னிச்சர் ... எல்லாமே அவனுக்காக என்னோட விருப்பத்தைக் காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டேன். அவன்தான் என்னோட உலகம். அவன்தான் என்னோட வாழ்க்கை."
YOU ARE READING
Despair to Hope (Tamil Version)
Spiritualகுடும்பத்திலும் சமூகத்திலும் அலுவலகத்திலும் நாம் தினந்தோறும் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதில் நாம் பெறும் இறையுதவிதான், நம்முடைய வாழ்க்கை அனுபவத்தரத்தை நிர்ணயிக்கிறது. மூன்றே மூன்று ஆன்மீகத் தத்துவங்களைப் புரிந்துகொண்டு நம் வாழ்க்கையில் செயல்படுத...