"அனிதா என்ன சொன்னா கார்த்திக்?"
அது அந்த வாரத்தின் சனிக்கிழமை. கீதா பிரியாவைப் பார்க்க, சென்னைக்குப் போயிருந்தாள். அது மதிய உச்சிவேளை. நாங்கள் என் வீட்டின் பக்கவாட்டு வெளிமுற்றத்தில் இருந்த ஒரு மாமரத்தின் கீழ், நிழலில் சேர்கள் போட்டு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். கார்த்திக் நேற்று இரவு அனிதாவைப் பார்க்க வந்திருந்தான். அவள் இன்று காலை, என்னிடம் போனில் தகவல் தெரிவித்துவிட்டு, கார்த்திக்கை இங்கு அனுப்பியிருந்தாள்.
"வேற ஒண்ணும் சொல்லலை. உங்களப் பாத்துட்டு வரச் சொன்னா." கார்த்திக் சோர்வுடன் காணப்பட்டான். அவன் தயங்கித் தயங்கி, கூசிக் கூசிப் பேசினான்.
"ராமன் ஏதாச்சும் சொன்னாரா?"
"அவர் அனிதாவ என்னோட அனுப்பத் தயங்கறார்." அவன் கண்கள் நிலத்தைப் பார்த்துக்கொண்டிருந்தன.
நான் சற்று நேரம் அமைதியாக இருந்தேன். பிறகு அவனிடம், "அனிதாவோட அப்பாங்கற ஸ்தானத்துல, அவரோட கவலை நியாயமானதுதான்" என்றேன்.
கார்த்திக், "இன்னொரு தடவ இதுமாதிரி நடக்காது. அனிதாவ நான் நல்லாப் பாத்துப்பேன்" என்றான்.
நான் புன்னகைத்தேன். 'நீ அவளைப் பார்த்துக்கொள்ளப் போகிறாயா? என் தேவதை உன்னை அற்புதமாகப் பார்த்துக்கொள்வாள், மகனே!' நான் என்ன நினைக்கிறேன் என்று அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
"பிராமிஸ், அங்கிள்."
மீண்டும் புன்னகைத்தேன். பக்கத்திலிருந்த எலுமிச்சை மரத்தைப் பார்த்தேன். மரம் முழுவதும் பச்சையாகவும் மஞ்சளாகவும் நிறைய எலுமிச்சைகள் காய்த்திருந்தன. பார்வையை எலுமிச்சை மரத்தைவிட்டு எடுக்காமல், நான் பேசத் தொடங்கினேன்.
"எனக்கு ஒரு கதை தெரியும், கார்த்திக். கதைய கவனமாக் கேளு. உனக்கு பிரயோஜனமா இருக்கும்."
கார்த்திக் தன் தலையை உயர்த்தி என்னை கவனித்தான். நான் தொடர்ந்தேன்.
YOU ARE READING
Despair to Hope (Tamil Version)
Spiritualகுடும்பத்திலும் சமூகத்திலும் அலுவலகத்திலும் நாம் தினந்தோறும் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதில் நாம் பெறும் இறையுதவிதான், நம்முடைய வாழ்க்கை அனுபவத்தரத்தை நிர்ணயிக்கிறது. மூன்றே மூன்று ஆன்மீகத் தத்துவங்களைப் புரிந்துகொண்டு நம் வாழ்க்கையில் செயல்படுத...