ராமன் சற்று கவலையுடன் காணப்பட்டார். அவர் என்னிடம், "ஒருவேளை சென்னை வீட்டில இவள் எதுனாச்சும் செஞ்சிட்டான்னா?" என்று ஆதங்கப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை காலையில், ராமன், சுவேதா, அனிதா, கார்த்திக் எல்லோரும் என் வீட்டின் ஹாலில் அசம்பிளாகி இருந்தோம். அனிதா பிரகாசமான பிங்க் கலர் சேலை அணிந்திருந்தாள். அவள் உள்ளிருந்து மகிழ்ச்சிப் பிரவாகம் வெளிக்கிளம்பி, அவள் கண்ணிலும் கன்னத்திலும் வழிந்தது. சுவேதா உதவியுடன், அவள் பேக்கிங் செய்வதில் பிஸியாக இருந்தாள்.
நான் ராமனை ஆசுவாசப்படுத்தினேன். "கவலப்படாதீங்க. அந்த மாதிரி எதுவும் அனிதா இனிமே செய்யமாட்டா."
இதற்குள் டாக்ஸி வந்து கேட்டில் நின்றது. அனிதா, ராமனிடமும் சுவேதாவிடமும் விடைபெற்றுக்கொண்டாள். கார்த்திக், ராமனிடமும் சுவேதாவிடமும் என்னிடமும் விடைபெற்றுக்கொண்டான். நாங்கள் எல்லோரும் டாக்ஸிக்குச் சென்றோம். லக்கேஜ் எல்லாம் டிக்கியில் எடுத்து வைத்ததும், அனிதாவும் கார்த்திக்கும் டாக்ஸியில் ஏறி அமர்ந்தனர். நாங்கள் எல்லோரும் வழியனுப்பக் கையசைத்தோம்.
எங்கள் பக்கமிருந்த கதவருகே உட்கார்ந்திருந்த அனிதா, என்னைப் பார்த்து, "டாட், பை" என்றாள்.
நான் அருகே இருந்த ராமன் பக்கம் திரும்பினேன். ராமன், "பை" என்றார்.
அனிதா அதை லட்சியம் செய்யாமல், என்னைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டு, "டா...ட், பை" என்றாள். பின், தன் இரு கண்களையும் இறுக்கமாக ஒரு நொடி மூடித் திறந்தாள். பிறகு, தன் தலையை பதினைந்து டிகிரி இடதுபக்கம் சாய்த்துக்கொண்டு, தன் டிரேட்மார்க் காந்தப் புன்னகையை வீசினாள்.
என் இதயம் உருகி, கண்களுக்குக் கண்ணீரை அனுப்ப, அவள் புன்னகை மங்கலாகத் தெரிய, டாக்ஸி நகர ஆரம்பித்தது.
*****
YOU ARE READING
Despair to Hope (Tamil Version)
Spiritualகுடும்பத்திலும் சமூகத்திலும் அலுவலகத்திலும் நாம் தினந்தோறும் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதில் நாம் பெறும் இறையுதவிதான், நம்முடைய வாழ்க்கை அனுபவத்தரத்தை நிர்ணயிக்கிறது. மூன்றே மூன்று ஆன்மீகத் தத்துவங்களைப் புரிந்துகொண்டு நம் வாழ்க்கையில் செயல்படுத...