பாடசாலை, வீடு என்று அதீனாவின் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருக்க, வாரங்கள் தங்கள் பாட்டில் நகர்ந்து கொண்டிருந்தன. வாழ்க்கை அவளை இறுகப் பற்றியிருக்க, மேலதிக வேலை ஒன்றும் செய்வதற்கு அவளுக்கு நேரம் இருக்கவில்லை.
முன்னர் செய்யும் அளவிற்கு இபாதத்களை மேற்கொள்ளவும் அவளால் முடியவில்லை. நாளுக்கு நாள் அவளது ஈமான் பலவீனமடைந்து கொண்டு செல்வதை உணர ஒரு மாதம் தேவைப்பட்டது.
அவள் இப்பொழுதெல்லாம் செய்வது ஐந்து நேரம் தொழுவது மட்டுமே. பலபோது தொழுகையில் முழுமையாக கவனம் செலுத்த முடிவதில்லை. அய்னைனின் நினைவுகள் நித்தமும் அவளை தொல்லை செய்த வண்ணமே புகையிரதமாய் நீண்டு கொண்டிருந்தன.
தொழுகையிலும் கூட மனதை ஒருநிலைப்படுத்த முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்த அவளது ஈமானை எப்படி நிமிர்ந்திருக்கச் செய்வதென்று அவளறியவில்லை. நாட்கள் சோகமயமாகச் சித்தரிக்கப்பட்ட வண்ணமிருந்தன.
மூன்று நாட்களுக்கு முன்னர் வந்து அவளைப் பெண் பார்த்து விட்டுச் சென்ற முஆதின் குடும்பத்தினர் பெண்ணை பிடித்து இருப்பதாக கூறியனுப்பிய தகவல் அதீனாவை வாட்டம் கொள்ளச் செய்தது.
அய்னைனுக்காகத் தனது இதயம் துடித்துக் கொண்டிருக்கும் செய்தியை அவளது வீட்டினருக்கு கூடிய சீக்கிரமே அறிவித்துவிட வேண்டும் என்று நாடி, அதைப் பற்றித் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும்போது கரீமா தாத்தாவின் வீட்டுக் கூரை மீதிருந்து வெள்ளையும் சாம்பலும் கலந்த பஞ்சுப்பெட்டிப் பூனை பாய்ந்து தரையிறங்கியது.
ஆனால் எவ்வாறு கூறுவது? அவள் கூறுவதை ஏற்றுக் கொள்வார்களா? அவளது உணர்ச்சிகளை தட்டிக் கழிப்பார்களா? இல்லை அவன், அந்த கடுகடு மூஞ்சி தான் ஒத்துக் கொள்வானா?
அவனில் ஒரு மாற்றமும் இல்லை. அதே சிடுமூஞ்சி முகத்தில் சிறு புன்னகை அன்று. அந்த வீட்டுக்கு வந்து இரண்டு மாதங்கள் கடந்தும் ஒரு நாளாவது அய்னைன் இவளைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
![](https://img.wattpad.com/cover/286077754-288-k629557.jpg)
YOU ARE READING
இதயத்திலோர் ஆணி
Spiritualஎங்கு கீறல் விழவே கூடாதென இத்தனை வருடங்களாக ஆசைப்பட்டாளோ, அங்கு ஆணி அறைந்தாற் போல வடுவொன்று!