ஒருவன் அல்லாஹ்வின் நினைவை விட்டும் தன்னைத் தூரமாக்கிக் கொள்ளும் போது அவனது வாழ்வு அவனையறியாமலே இருளடைந்து விடுகிறது. மகிழ்ச்சி எனும் வார்த்தைக்கே இடமில்லாது போய்விடும் பட்சத்தில் மேலும் மேலும் பாவ சிந்தனைகளில் முழ்கி காரிருளினுல் செல்கிறான் அவன்.
அதீனாவின் தற்போதைய நிலையும் ஏறக்குறைய அப்படித் தான் இருந்தது. வெள்ளிக்கிழமை நாள் ஒன்று, மொட்டைமாடியில் கதிரையொன்றைப் போட்டு அமர்ந்திருந்தாள். ஹெட்ஃபோன் மாட்டப்பட்டிருக்க, ஏதோ சோகக்கீதமொன்று அதிலிருந்து அவள் காதுகளைச் சென்றடைந்து கொண்டிருந்தன.
ஒரு நாளும் பாடல் கேட்காதவள், இசையில் இரசனையில்லாதவள் இன்று இப்படி அமர்ந்திருப்பது அதிசயத்தக்க விடயம் தான். கண்கள் மட்டும் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு நிமிடமும் இதயத்தில் பாரம் கூடிக் கொண்டே போனது.
ழுஹர்த் தொழுகைக்கு அதான் ஒலித்தது கூடக் கேட்காமல் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கையில், தூய்மையான உடையணிந்து கொண்டு ஜுமுஆத் தொழுகைக்காக அய்னைனும் வஸீமும் வீட்டிலிருந்து வெளியேறிச் செல்வது தெரிந்தது.
இந்த மனுசனால தான் என் லைஃப் இப்டி மாறிட்டு.
ஒரு பாவமும் செய்யாத அவனைக் கடிந்து கொண்டு அவர்கள் போகும் திசையையே பார்த்திருந்தவள் ஏதோ ஞாபகம் வந்ததும் சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அன்று கரீமா கூறியது மீண்டும் மண்டையோட்டுக்குள் ஓடி மறைந்தது.
அவள் சில மாதங்களுக்கு முன்பிருந்த நிலையும் இன்று இருக்கும் நிலையும் முற்றிலும் மாறுபட்டிருந்தன. அல்லாஹ்வுக்குப் பயந்து ஒவ்வொரு காரியத்தையும் ஹராத்தின் வாடை கூடப் படாமல் பார்த்துப் பார்த்துச் செய்பவள், மற்றவர்களையும் பாவத்திலிருந்து தடுப்பவள், இன்று இசைப்பெட்டியுடன் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறாள்.
எதிர்பாராதபோது ஒரு கேவல் வெளிப்பட்டது. முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு கீழிறங்கி வந்தாள். வுழூ செய்து கொண்டு தொழுதவள், தொழுது முடித்த மறு நிமிடமே எழுந்து பாட்டுப் பெட்டியைத் தூக்கி விட்டாள். ஜுமுஆ தினம் என்று ஒரு எண்ணம் கூட இல்லை அவளுக்கு.
YOU ARE READING
இதயத்திலோர் ஆணி
Spiritualஎங்கு கீறல் விழவே கூடாதென இத்தனை வருடங்களாக ஆசைப்பட்டாளோ, அங்கு ஆணி அறைந்தாற் போல வடுவொன்று!