69 பாரம் இறங்கியது
அது மட்டும் வேறு ஒரு சூழ்நிலையாக இருந்திருந்தால், மிதிலா தன்னை அணைத்த போது சும்மா இருந்திருக்க மாட்டான் ஸ்ரீராம். ஆனால் இப்போது, சூழ்நிலை வித்தியாசமானது. இப்போது அவள் உணர்வுகளால் ஆளப்பட்டு கொண்டிருக்கிறாள்.
"மிதிலா..." என்று அவன் மெல்ல அழைக்க,
அவனை மேலும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள் மிதிலா, அவனை விட்டுவிட மனமில்லாமல்.
"மிதிலா, சொல்றத கேளு"
அவளது அணைப்புச் சங்கிலியை உடைத்து, அவள் கண்ணீரைத் துடைத்தான் ஸ்ரீராம். அவளது கண்ணீரை துடைத்த அவனது கரங்களைப் பற்றிக்கொண்டு,
"இதைப் பத்தித் தான் நான் உங்ககிட்ட பேசணும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்" என்றாள்.
"நிச்சயம் பேசலாம்... இப்போ வா உள்ளே போகலாம்"
தனது சேலை முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் மிதிலா.
"இந்தாங்க மிதிலா, பாயசம் சாப்பிடுங்க" என்று ஒரு கிண்ணம் பாயசத்தை அவளிடம் கொடுத்தாள் நர்மதா.
அவளிடமிருந்து அதை பெற்றுக்கொண்டு அமைதியாய் சாப்பிட்டாள் மிதிலா.
"நீயும் கொஞ்சம் சாப்பிடு ராமு" என்றாள் நர்மதா.
மிதிலாவின் கையிலிருந்த கிண்ணத்திலிருந்து, ஒரு தேக்கரண்டி நிறைய பாயசத்தை எடுத்து சாப்பிட்டான் ஸ்ரீராம்.
பாயசத்தை சாப்பிட்டு முடித்துவிட்டு, ஸ்ரீராமுக்காக காத்திருக்காமல், தங்கள் அறையை நோக்கிச் சென்றாள் மிதிலா. அவளை பின்தொடர்ந்து சென்ற ஸ்ரீராம், அறையின் உள்ளே நுழைந்து கதவை சாத்தி தாளிட்டான். மிதிலா கட்டிலின் மீது அமர்ந்து இருப்பதை கண்டான். அந்த அறையில் அதீத நிசப்தம் நிலவியது. மிதிலாவின் கண்கள் அருவி என பொழிந்தன. அவளால் தனது கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவள் அருகில் வந்து அமர்ந்தான் ஸ்ரீராம். அதற்காகவே காத்திருந்தவள் போல, அவனது கரத்தை தன் கரத்தால் சுற்றி வளைத்து அவன் தோளில் சாய்ந்தாள் மிதிலா.
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...