டிங் டாங் - 22

485 32 1
                                    


"வெக்க படு... வெக்க படு... வெக்க படு" மந்திரத்தை ஜபிப்பது போல் வைஷ்ணவியின் காதிலே ஷெர்லின் கூவிக்கொண்டே இருக்க, திருமண கோலத்தில் தயாராகி அமர்ந்திருந்த வைஷ்ணவி அதே மந்திரத்தை மனதில் மௌனமாக உச்சரித்துக்கொண்டிருந்தாள். 

நேற்று நடந்த நிச்சய விழாவில் மணப்பெண்ணிற்குரிய எந்தவொரு அடையாளமும் இல்லாமல் தன் வாக்கில் சந்தோசமாக வளைய வந்த வைஷ்ணவியை கார்த்தியின் வீட்டினர் விசித்திரமாக பார்த்துவைக்க, 

"கொஞ்சமாவது வெக்கப்பட்டுடி... எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்க" வைஷ்ணவியின் காதில் வந்து மாலையை சரி செய்வது போல் கிசுகிசுத்தார் அவள் அன்னை மஹேஸ்வரி. 

"நான் என்ன தப்பு பண்ணேன் ஏன் வெக்கப்படணும்?" எதிர் கேள்வி கேட்டவளை மணமேடை என்றும் பாராமல் கையிலேயே கிள்ளி வைத்தார். 

வலியில் முகம் சுருங்கிட மெல்லிய, "ஆ வலிக்கிது ம்மா" சத்தம் அவளிடம். 

அருகில் இருந்த நண்பனிடம் ஏதோ சிரித்து பேசிக்கொண்டிருந்த கார்த்தி வேகமாக அவளையும் கோவமாக நின்ற மாமியாரையும் பார்த்தவன், "என்னாச்சு வைஷ்ணவி" என்க அவனிடம் அன்னையின் சேட்டையை வத்தி வைத்துவிட்டாள். 

"விடுங்க அத்தை. அவ அவளா இருந்தா தான் அழகு" சுற்றம் பார்க்காமல் கூட்டத்திலிருந்து அவளை மறைந்து முன் வந்து நின்று வைஷ்ணவியின் கையை பற்றி காயத்தை ஆராய்ந்தான். 

கத்தும் அளவு பெரிதாக காயம் இல்லை, "இப்போ வலி இல்ல" எனவும் தான் அவள் கண்களை பார்த்து தலை அசைத்து அமைதியாக மீண்டும் அவள் அருகே வந்து நின்றுவிட்டான். 

மருமகனை மீறி தன்னை பார்த்து புருவம் உயர்த்தி சிரிக்கும் மகளை அதிகம் விரட்ட முடியாமல் போக, வைஷ்ணவியை முறைத்துக்கொண்டு விருந்தினர்களை கவனிக்க சென்றுவிட்டார் அப்பொழுது. 

ஆனால் அதன் பிறகு அறைக்குள் வந்த மகளை திட்டி தீர்த்துவிட்டார். அதன் வெளிப்பாடே இன்று வைஷ்ணவி, ஷெர்லின் இருவரும் வெட்கத்தை முயன்று வரவழைக்கின்றனர். வந்ததா என்று கேட்டால் நிச்சயம் இல்லை, வெட்கத்திற்கு பதிலாக பசி தான் வந்தது. 

டிங் டாங் காதல்Where stories live. Discover now