22 நடவடிக்கையில் மாற்றம்
காரில் ஏறாமல் எதையோ யோசித்தபடி நின்றாள் சக்தி.
"என்ன ஆச்சு சக்தி?" என்றாள் துர்கா.
"நான் இந்த ட்ரெஸ்ஸோட போனா, அவர்கிட்ட மாட்டிக்குவேன். நான் இதை மாத்திடறது நல்லது"
அவள் உரைப்பது சரி என்பது போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட துர்காவும், பரமேஸ்வரனும், ஆம் என்று தலையசைத்தார்கள். மீண்டும் அதே அறைக்கு ஓடிச்சென்ற சக்தி, தனது பழைய உடைகளை மாற்றிக் கொண்டு திரும்பி வந்தாள்.
"இந்த டிரஸ் கிழிஞ்சிருக்கு" என்றாள் துர்கா.
"நான் பார்த்துக்கிறேன் கா" என்றாள் சக்தி.
துர்கா தன்னிடம் கொடுத்த பாட்டிலில் இருந்து, பத்து தூக்க மாத்திரைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, அந்த பாட்டிலை துர்காவிடம் திருப்பிக் கொடுத்தாள் சக்தி.
"என்னால இந்த பாட்டிலை அவருக்கு தெரியாம மறைக்க முடியாது. நான் இந்த மாத்திரையை கொண்டு போய் அந்த பாட்டில்ல போட்டுடுறேன்" என்றாள்.
டேஷ் போர்டில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து அவளிடம் கொடுத்தாள் துர்கா. அந்த மாத்திரைகளை அந்த காகிதத்தில் மடித்து வைத்துக் கொண்டாள் சக்தி. ஃபார்ம் ஹவுஸை நோக்கி காரை கிளப்பினான் பரமேஸ்வரன்.
மீண்டும் ருத்ரனிடமே திரும்பிச் செல்ல வேண்டும் என்று தான் எடுத்த முடிவு சரியானது தானா என்பதை பற்றி ஆலோசித்தபடி இருந்தாள் சக்தி. அங்கு செல்லாவிட்டால் அவள் வேறு எங்கு செல்ல முடியும்? ஒருவேளை, நடராஜனின் குடும்பம், அவள் நடராஜனை திருமணம் செய்து கொண்டு தான் ஆக வேண்டும் என்று அவளை கட்டாயப்படுத்தினால் அவளால் என்ன செய்ய முடியும்? தான் ருத்ரனிடம் பணம் கேட்டதாய் நிச்சயம் நடராஜன் ஒப்புக்கொள்ள போவதில்லை. அவன் ஒரு சுயநலவாதி. அவனுக்கு தேவையெல்லாம் பணம் மட்டுமே. அவனிடம் இருந்து நிச்சயம் சக்திக்கு பாசமோ, சந்தோஷமோ கிடைக்கப் போவதில்லை. அவளை பயன்படுத்தி மேலும் பணம் சம்பாதிக்கவே அவன் திட்டமிடுவான். அவள் தான் இனிப்புகள் செய்வதில் வல்லவள் ஆயிற்றே...! அந்த ஒரு திறமை போதாதா அவனுக்கு பணம் ஈட்ட?
YOU ARE READING
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )
Romanceஉச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந...