அதிகாலையிலே விழிப்பு வந்துவிட்டது பாலாவுக்கு. எழும்ப மனமில்லை தான். இரவில் காதில் மாட்டியிருந்த ஹெட்செட் அவன் உடலையே சுற்றிக் கொண்டு கிடந்தது. போனும் சார்ஜ் இன்றி கிடந்தது.
ஹெட்செட்டை தன் உடலில் இருந்து பிரித்தெடுத்தவன் போனை சார்ஜ் போட்டுவிட்டு.. மாடி அறையில் இருந்து வெளியே வந்து சுவரில் அமர்ந்தான்.
விடியலை ரசித்தபடி.. இன்று தான் செய்ய வேண்டிய வேலைகளை பற்றி யோசித்துக் கொண்டிருந்தான் பாலா.
பட்டப்படிப்பு முடிந்துவிட்டது. சில வருடங்கள் பெங்களூரில் வேலை பார்த்தான். இப்போது தன் சொந்த ஊரிலே எலக்ட்ரிக்கல்ஸ் கடை ஒன்றை தொடங்க முடிவு செய்திருந்தான் பாலா. அதுமட்டுமின்றி நண்பன் மதனுடன் சேர்ந்து வயரிங் வேலைகளை காண்ட்ராக்ட்டாக எடுத்து செய்ய முடிவு செய்திருந்தான்.
நாளை கடையின் திறப்பு விழா. தன் எண்ணங்களில் மூழ்கியிருந்த பாலாவின் பார்வையில் பதிந்தாள் கங்கா.
கங்கா பாலாவின் பக்கத்து வீடு தான். அம்மா சங்கரி உயிருடன் இல்லை. அப்பா சதாசிவம் தங்கை கீர்த்தனா தான் அவள் உலகம்.
பத்தாவது வரையே படித்திருக்கிறாள். பாலாவும் அவளும் ஒரே வகுப்பு தான். பாலா படிப்பில் எப்போதும் வகுப்பில் முதலாவதாக வருவான். கங்கா அவனளவு இல்லை என்றாலும்.. சுமாராக படிப்பாள்.
பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த போதும் அவளால் படிப்பை தொடர முடியவில்லை. காரணம் அவள் தாய் சங்கரியின் மறைவு. படிப்பை அவளே நிறுத்திக் கொண்டு.. தங்கை கீர்த்தனாவுக்கு தாயாகிப் போனாள்.
தன் வீட்டு முற்றத்தில் தண்ணீர் தெளித்தவள்.. அப்படியே பாலா வீட்டு முற்றத்துக்கும் சேர்த்து தண்ணீர் தெளித்து விட்டு இரு வீட்டு வாசலிலும் கோலம் போட்டாள்.
அதை பார்த்துக் கொண்டிருந்த பாலாவின் இதழ்களில் தானாக மலர்ந்தது.
இது கங்காவுக்கு ஒரு பழக்கம். பாலா வீட்டு முற்றத்துக்கும் சேர்த்து தண்ணீர் தெளித்து கோலம் போடுவாள்.