கங்காவிடம் இப்போது தான்.. கொஞ்சம் மாற்றம் தெரிகிறது.. இந்த நிலையில் அவளிடம் வீடு குறித்து பேச வேண்டுமா என்ற தயக்கம் இருந்த போதிலும்.. பேசிவிட்டால் அவர்கள் கங்காவை மீண்டும் தொந்தரவு செய்ய வாய்ப்பிராதே என்ற எண்ணத்துடன் கங்காவிடம் பேசினான் பாலா.
கங்கா வீட்டை கொடுத்துவிட சம்மதம் சொன்னது சற்று நிம்மதியாக இருந்த போதும்.. இப்போது இதுகுறித்து பேசுவது அவளுக்கு எவ்வளவு வருத்தம் தரும் என்பது புரிந்தது பாலாவுக்கு.
“அவளே எடுத்துக்கட்டும்.. எனக்கு எதுவும் வேண்டாம்..” என சொன்ன கங்கா அதன்பின் அமைதியாக இருந்தாள்.
பாலாவுக்கும் என்ன பேசுவதென்றே புரியவில்லை.
“சரி வா.. அங்க இருந்து உன்னோட பொருளை எல்லாம் எடுத்துட்டு வந்துடலாம்..” என அவளை அழைத்துச் சென்றான் பாலா.
தன் தாய் தந்தையின் திருமண புகைப்படம்.. தன் தாய்க்கு பிடித்த தன்னுடைய சிறுவயது புகைப்படம்.. அன்னையின் நினைவு வரும் போது ஆறுதல் தரும் புடவை ஒன்று.. அவ்வளவு தான் கங்கா அங்கிருந்து எடுத்தாள்.
போதும் என்பது போல கங்கா பாலாவை பார்க்க.. “வேற எதுவும் வேண்டாமா கங்கா..” என கேட்டான் அவன்.
வேண்டாம் என தலையசைத்தாள் கங்கா. “வீட்டு பத்திரம் லாம் எதுல இருக்கு..” என பாலா கேட்க.. “எல்லாமே பீரோல தான் இருக்கும்..” என சாவியை எடுத்துக் கொடுத்தாள் கங்கா.
பாலா தேவையானதை பார்த்துக் கொண்டிருக்க.. வீட்டை பார்வையால் அலசினாள் கங்கா. சிறு வயது முதலான ஞாபகங்கள் மனதில் அலைபாய்ந்தது.
இந்த இடம்.. இங்கு அமர்ந்து தான் டீவி பார்ப்பாள்.. இதோ.. இங்கே அமர்ந்து தான் அம்மா தலை பின்னிவிடுவாள்.. இங்கே இங்கே அமர்ந்து தான் அப்பா சாப்பிடுவார்.. இங்கே இங்கே தான் கடைசியாக அவர்கள் உடல்.. உயிரற்ற உடல்..
கண்கள் கலங்க.. அங்கிருந்து வெளியேறி விட மனம் துடித்தது.. கையில் இருந்த தாயின் புடவையை இறுக பற்றிக் கொண்டாள்.