அதிர்ச்சியில் இருந்த நிலையில் நடந்ததாலோ என்னவோ.. திருமணமான உணர்வே கங்காவுக்கு இல்லை.
பாலா தன்னுடன் இருக்கிறான்.. தமயந்தி அத்தையும் ரத்தினவேல் மாமாவும் தன்னை கவனித்துக் கொள்கிறார்கள் என்ற நிம்மதி இருந்த போதிலும்.. தந்தையை இழந்த அதிர்ச்சியாலோ என்னவோ.. இயல்பாக இல்லை அவள் சில தினங்களாக.
அவளை உடனிருந்து கவனித்துக் கொண்டான் பாலா. கழுத்தில் இருந்த மாங்கல்யம் நடந்ததை உணர்த்தினாலும் அவள் இயல்பாக இல்லை.
அவ்வப்போது அப்பாவின் நினைவிலும் கீர்த்தினாவின் நினைவிலும் எதையாவது புலம்புவதும்.. பின் நடந்ததை உணர்ந்து அவளே அமைதியானாள்.
எப்படி இருந்த பெண் இப்படி மாறிவிட்டாளே என்ற கவலையில் ஆழ்ந்தனர் பாலாவும் அவன் பெற்றோரும். இதற்கெல்லாம் முதல் காரணமான கீர்த்தனா மீது அவர்களுக்கு கடுமையான கோபம் இருந்தது.
அன்று பகலில் படுத்த கங்கா.. நெடுநேரம் கழித்தே கண்விழித்தாள். இருப்பது பாலாவின் அறையில் என்பது புரிந்தது.
ஏன்.. இங்க வந்து ஏன் படுத்தேன்.. அ.. அப்பா.. என ஏதேதோ எண்ணங்கள் தோன்ற.. நிகழ்ந்தவைகளையும் எண்ணிப் பார்த்து பெருமூச்சுடன் அங்கிருந்து எழுந்தாள்.
தனக்கு திருமணமாகி விட்டது.. இனி தனக்கு இந்தக் குடும்பம் தான் எல்லாம் என்பது மனதில் பதிந்தது.
மெல்ல எழுந்தவளின் காதில் பாலாவின் குரல் விழுந்தது.
“ஆங்.. நாளைக்கு நான் கண்டிப்பா வர்றேன்.. எல்லாத்தையும் முடிச்சு தந்துடுறேன்..” என யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தான் பாலா.
“மதன் சில வேலையா தனியா சமாளிச்சுக்க மாட்டான்.. நான் தான் நேரில போய் பார்க்கணும்..” என முன்பு பாலா கூறியது நினைவில் வந்தது.
தன் வேலையை எல்லாம் விட்டுவிட்டு பாலா தன்னுடனே இருக்கிறான் என்பது அப்போது தான் கங்காவுக்கு புரிந்தது.