சதாசிவம் மயங்கி சரிகையில்.. “அப்பா..” என அலறியவள்.. அதன்பின் ஒரு வார்த்தை.. ஒரு சொட்டு கண்ணீர் கூட.. வெளிவரவில்லை கங்காவிடம் இருந்து.
முதல்முறையாக தான் செய்தது தவறோ.. தன்னால் தான் இப்படியோ.. என்ற உறுத்தல் மனதில் தோன்ற.. கண்ணீருடன் தந்தை உடலை பார்த்தபடி நின்றிருந்தாள் கீர்த்தனா.
தமயந்தி ரத்தினவேல் பாலா என யாருக்கும் கங்காவை எப்படி தேற்றுவது என புரியவில்லை.
“கங்கா.. அழுதுடு மா.. இப்டி இருக்காத.. உன்னை இப்டி பார்க்க என்னால முடியலை..” என அவள் கையை பிடித்தபடி கண்ணீர் வடித்தார் தமயந்தி.
தந்தையின் உடலை வெறித்து பார்த்தபடி அசையாமல் நின்றிருந்தாள் கங்கா.
அப்போது தான் அரவிந்தின் தாய் ஈஸ்வரி தன் கணவர் ராமலிங்கத்துடன் அங்கே வந்தார்.
தனக்கு தெரியாமல் தன் மகனை திருமணம் செய்து கொண்டவளையும் அவள் குடும்பத்தையும் மேலும் நோகடிக்கும் எண்ணத்துடனே அங்கே வந்தார் ஈஸ்வரி.
ஆனால் அங்கிருந்த சூழ்நிலை அவர் மனதை மாற்றி விட்டது.. நல்லவிதமாக அல்ல.. எவ்வளவு தேறும் என்ற எண்ணம்.
வீடு பழைய காலத்து வீடாக இருந்த போதிலும்.. விற்றால்.. தன் மகனின் பங்கு எவ்வளவு தேறும்.. இரண்டும் பொண்ணுங்க.. எப்படியும் நகை இருக்கும்.. அதில சரிபாதியை இப்ப பிரிச்சு எடுத்துடணும்.. என மனதில் திட்டம் தீட்டினார் ஈஸ்வரி.
அதிர்ச்சியில் கண்ணீர் கூட விடாமல் உறைந்து நின்ற கங்காவை பார்வையால் அளவிட்ட ஈஸ்வரி.. “இப்போதைக்கு பாதியை சுருட்டுவோம்.. இவள பார்த்தா அப்பாவியா தெரியுது..மிச்சத்தை அடிச்சு கூட பிடுங்கிக்கலாம்..”என எண்ணமிட்டார்.
“செத்தவருக்கு இரண்டும் பொண்ணுங்க.. யாரு கொள்ளி வைக்கிறது..” என துக்கம் விசாரிக்க வந்த யாரோ ஒருவர் கேள்வி எழுப்பினார்.
“இந்த வீட்டு மருமகன்.. என் பிள்ளை இருக்கான்ல..” என்றார் ஈஸ்வரி.
![](https://img.wattpad.com/cover/174485727-288-k169554.jpg)