கங்காவிடம்.. “நேத்து பொண்ணு பார்த்துட்டு போனவங்க என்ன சொன்னாங்க..” என ஆவலாக கேட்டார் தமயந்தி.
“அப்பா எதுவும் சொல்லலை.. அப்ப அவ்ளோதான்..” என இயல்பாக சொன்னாள் கங்கா.
“எப்பதான் இவளுக்கு ஒரு நல்லது நடக்க போகுதோ..” என மனதுக்குள் எண்ணினார் தமயந்தி.
ஆனாலும் கங்காவின் மனம் நோகாத வண்ணம்.. “சரி விடு.. இதைவிட நல்ல இடமா உனக்கு அமையும்..” என்றார் தமயந்தி.
பைக் சாவியை மறந்துவிட்டு.. அதை எடுத்து செல்ல வந்த பாலாவும் தன் மனதில் அதையே எண்ணியபடியே அங்கிருந்து கிளம்பினான்.
“மதியத்துக்கு என்ன பண்ண.. உன் தங்கச்சி ஒன்னும் சொல்லலையா..” என கேட்டார் தமயந்தி.
“வாய்க்குள்ளே முணங்கிருப்பா.. அவ சாப்பிட மாட்டா.. ப்ரெண்ட்ஸ்க்கு கொடுத்துட்டு கேண்டீன்ல எதையாவது சாப்பிட்டுக்குவா.. அப்பாட்ட காசு வாங்கிட்டு போனா..” என்றாள் கங்கா.
“உன் சாப்பாட்டை விட ருசியா இருக்காமோ கேண்டீன்ல..” என சலித்துக் கொண்டார் தமயந்தி.
“விடுங்க அத்தை.. சின்ன பிள்ளை தான..” என தங்கைக்கு பரிந்து பேசினாள் கங்கா.
“ஆமா.. சின்ன பிள்ளை.. மடியில தூக்கி வச்சு கொஞ்சு..” என தமயந்தி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
“அதை விடுங்க அத்தை..” என பேச்சை மாற்றினாள் கங்கா.
வீட்டில் இருந்து கிளம்பிய போதும் பாலாவின் மனம் கங்காவிடம் தான் நின்றது.
தன் தாய் சொன்னது போல.. கங்காவிற்கு நல்ல இடமாக அமையும் என்று உள்ளூர நம்பிக்கை இருந்த போதிலும்.. ஏன் இப்படி ஒவ்வொரு இடமும் தட்டிப்போகிறதோ.. என்ற கவலையும் தோன்றிற்று.
பாலா பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் தான்.. கங்காவை முதன்முதலில் பெண் பார்க்க வந்தனர்.
அப்போது பாலா விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருந்தான். காலையில் பத்தரை போல தான் மாப்பிள்ளை வீட்டார் வந்தனர்.
![](https://img.wattpad.com/cover/174485727-288-k169554.jpg)