11

788 46 73
                                    

"என்னது!? மாப்பிள்ளைக்கு ஆக்ஸிடெண்ட்டா??" என ஒரு குரல் மண்டபம் முழுவதும் எதிரொலிக்க, சட்டெனத் தவில் நாதஸ்வர ஒலிகள் அடங்கிவிட, அசாதாரண சூழலொன்று நிலவியது அங்கே.

சொந்த பந்தங்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொள்ள, நான்கைந்து பேர் அங்குமிங்கும் நடக்க, மேடையிலிருந்து பெரியவர்கள் அவசரமாக இறங்கி வாசலுக்குச் செல்ல, இந்தக் களேபரத்தில், தன்னந்தனியாக மேடையில் அமர்ந்திருந்த மணப்பெண்ணை மறந்துவிட்டிருந்தனர் அனைவருமே. ஆதித் மட்டும் நிமிர்ந்து அவளைப் பார்க்க, கண்களில் லேசாகக் கண்ணீருடன், காட்டில் தொலைந்த முயல்குட்டி போலப் பரிதாபகரமாக விழித்துக்கொண்டு அங்குமிங்கும் பார்த்துத் தேடினாள் அவள் யாரையோ.

"தாரா!!" என்றவாறு அவளது தம்பி ஓடிவந்து அவளருகில் நின்றதும்தான் சற்றே ஆசுவாசமானாள் அவள். அதைப் பார்த்துத் தானும் சற்று நிம்மதியானான் ஆதியும். ஆனால் அரைக்கணம் கூட அந்த நிம்மதி நீடிக்க விடாமல், விடுவிடுவென மேடையேறிய ஒரு பெண்மணி, தாராவை நோக்கிக் கைநீட்டி, "பொண்ணைப் பாரு, செரியான தரித்தரம்!! எந்த வேளையில பெத்தாங்களோ.. உன்னால எங்க பையனுக்கு ஆக்சிடெண்ட் ஆகி, கால் உடைஞ்சு, ஆஸ்பத்திரியில கெடக்குறான். மணமேடைல உட்கார்ந்து மாலை மாத்திக்க வேண்டியவனை.. இப்படி படுத்த படுக்கையா ஆக்கிட்டயேடி!" எனக் கத்த, அவள் திகைத்து முகம் வெளிர, ஆதிக்கே அதைக் கேட்டுக் கோபமாக வந்தது.

மணப்பெண்ணோ, சிலை போல அசையாமல் அமர்ந்திருந்தாள். கண்கள் மட்டும் கலங்கிச் சிவந்தன. தம்பி அவளது தோளைப் பிடித்தவாறு நிற்க, அவன் கைமீது கைவைத்து அவனைப் பிடித்திருந்தாள் அவள்.

நிறுத்தாமல் அந்தப் பெண்மணியும் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேச, புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டு அழுதார் பெண்ணின் அன்னை. ஆதித்தின் அருகில் அமர்ந்திருந்த பர்வதமும், விசித்து அழத் தொடங்கியிருந்தார் சன்னமாக. அதில் திகைத்துத் திரும்பினான் அவன்.

"பாட்டி!? What are you doing? Why do you sob?"

"கண்ணா.. அது நான் பார்க்க வளர்ந்த குழந்தைடா.. ஆளாளுக்கு அநியாயமா இப்படி அவமேல பழி போட்டு அழ வைக்கறாங்களே.. யாருமே கேக்க மாட்டேங்கிறாங்களே.."

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now