சிவராமன் தேடிப் பார்த்த வரையில் எல்லோருமே சக்கரவர்த்திக் குடும்பத்தை ஆஹா ஓஹோவென தான் மெச்சினார்கள். சினிமா வட்டாரத்தில் முக்கியமாக finance விஷயங்களில் நேர்மைக்கும் நாணயத்துக்கும் பேர் போன, சினிமாத் துறையில் இருந்த போதும் தலைமுறை தலைமுறையாக மிக கன்னியமான கௌரவமான வாழ்க்கை முறையை கையாளும் குடும்பம் எனவும் இன்றைய இளவட்ட ஹீரோக்களில் மதனைப் போல் ஒரு பணிவான பண்பான ஒரு ஹீரோவை பார்ப்பதே அரிது என கேட்கும் இடங்களில் எல்லாம் மதனுக்கும் அவன் குடும்பத்திற்கும் நூற்றுக்கு நூறு புள்ளிகள் வழங்கப்பட்டன. அதே சமயம் மதுரதிக்கு மதனின் சம்பந்தம் வந்திருப்பதாக கூறிய போது மதனையும் சக்கரவர்த்திக் குடும்பத்தையும் பற்றி உயர்வாக பேசிய அதே வாய்கள் இதென்ன புது கதை, இதெல்லாம் நடக்கும் காரியமா, ஆசைக்கும் கூட ஒரு அளவு வேண்டாமா என சிவராமனை கேலி செய்து சிரித்தனர்.
மதன் மற்றும் அந்த குடும்பத்தின் பெருமை மனதுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்த போதும் இந்த மலைக்கும் மடுவுக்குமான சம்பந்தம் நடைமுறைக்கு சாத்தியமா என எண்ணிய போது அது சிவராமனுக்கு பயத்தையே அளித்தது. தான் அந்த குடும்பத்தை பற்றி விசாரித்து அறிந்த பெருமைகளையும் அந்த குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக் கொள்ளப் போவதாக கூறிய போது அனைவரும் தன்னைப் பார்த்து கை கொட்டி சிரித்ததையும் மனைவியிடமும் மதுவிடமும் வந்து கூறினார் சிவராமன். மதனை எவ்வளவுக்கு எவ்வளவு பிடித்திருந்ததோ மது அவ்வளவுக்கு அவ்வளவு பயந்ததும் இதற்காகத் தான். நாளை ஊருக்கு முன்னாள் அசிங்கப் பட நேருமோ, பணத்துக்கு ஆசைப் பட்டு செய்து கொண்டதாக அவளைப் பலிச் சொல்வார்களோ பேருக்கு ஒரு திருமணமென்று அவன் அவளை பண்ணிக் கொண்டதாக அவனையே கூட ஊரில் பலிச் சொல்வார்களோ! இந்த திருமணத்தால் ஒரு வேளை மதனுக்கு சினிமா வட்டாரத்தில் இருந்த நல்ல பேர் கெட்டுப் போய் விட்டால்! என பல எண்ணங்கள் தோன்றி மதுவின் நிம்மதியைக் கெடுத்தன. ஆனால் ரேணுகா தெளிவாக இருந்தாள் இந்த ஜென்மத்தில் தனக்கு மதன் தான் மருமகன் என.