திருமணம் முடிந்த கையோடு மதுரதி மதன் மற்றும் சாரதா அம்மாவுடன் புகுந்த வீட்டுக்கு அழைத்து செல்லப் பட்டாள். தன் குடும்பத்தை விட்டு வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்கு செல்லும் எல்லா புது மணப்பெண்ணும் போல மதுவுக்கும் அழுகை பொத்துக் கொண்டு வந்தது. அம்மாவை கட்டிக் கொண்டு கொஞ்ச நேரம் அழுது தீர்த்தாள். அதை தாங்க முடியாமல் சுற்றி நின்ற அப்பா சத்யா வித்யா என எல்லோருமே கண் கலங்கி விட்டார்கள். சாரதா அம்மா தான் மதுவை தேற்றி மதுவின் குடும்பத்தையும் தைரியப்படுத்தி விட்டு மதுவை அவர்களோடு அழைத்துச் சென்றாள். மதன் எதுவும் பேசவில்லை வீடு சென்று சேரும் வரை ஆருதலாக மதுவின் கையை தன் கைக்குள் வைத்து பொத்திப் பிடித்துக் கொண்டான். திருமணத்துக்கு வந்த சொந்த பந்தங்கள் எல்லாம் வீடு திரும்பி இருந்த நிலையில் மதனின் மிக நெருங்கிய சொந்த பந்தங்கள் சிலர் மட்டுமே வீட்டில் எஞ்சி இருந்தனர். ஆரத்தி எடுத்து மதுவும் மதனும் புது மணத் தம்பதிகளாக வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தனர். வீட்டுக்குள் நுழைந்த கையோடு மதனின் பெரியம்மா இருவரையும் பூஜை அறைக்கு அழைத்து செல்ல மது தன் புகுந்த வீட்டில் குத்து விளக்கு ஏற்றினாள். பின்னர் மாப்பிள்ளை பெண்ணுக்கு பாலும் பழமும் கொடுத்தார்கள்.
இந்த சம்பிரதாயங்களுக்கிடையே வீட்டை பிரிந்த சோகம் கொஞ்சமாக மறைந்து மதுவின் முகம் மீண்டும் புத்தொளி பெற்றது. தன் புகுந்த வீட்டு உறவுகளோடு பேசி அவர்களை அறிந்து கொள்வதிலேயே அவளுக்கு நேரம் சென்றது. இரவு விருந்தை வீட்டிலேயே சமைத்திருந்தார்கள். மதியம் மாப்பிள்ளை பெண்ணாக இருவராலும் சுத்தமாக சாப்பிட முடியாது இருந்ததால் இரவு இருவரும் ஒன்றாக அமர்ந்து வயிரார சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்து சோபாவில் அமர்ந்து உறவினர்களோடு பேசிக் கொண்டு இருந்த மதனை சாரதா தனியாக அழைத்து ஏதோ சொல்லி மாடிக்கு அனுப்பி வைத்தாள். பின்னர் மதுவை தனது அறைக்கு அழைத்து சென்று மதுவை அங்கேயே குளித்து புடவை மாற்றிக் கொள்ளும் படி கூற மது அதன் படியே செய்தாள். முகத்தில் இருந்த மேக்கப்பையும் தலையில் இருந்த ஹேர் ஸ்ப்ரேவையும் நீக்கி குளித்து முடிக்க மதுவுக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆனது. குளித்து முடித்து வெளியே வந்தவள் அம்மா எடுத்துக் கொடுத்திருந்த குங்குமக் கலரில் மெல்லிய தங்க நிற பாடர் வைத்த புடவையை லூசாக விட்டுக் கட்டிக் கொண்டாள். தலை முடியை பாதியாக எடுத்து க்ளிப் வைத்துக் கொண்டு எப்பொழுதும் போல கண்ணுக்கு மட்டும் லேசாக மை தீட்டிக் கொண்டு வெளியே வந்தவளை நெட்டி முறித்த சாரதா அவள் தலையில் பூ வைத்து விட்டு அனைவரும் உறங்க சென்ற பின்னர் அவளை மாடிக்கு அனுப்பி வைத்தாள். அம்மா வேறு இரண்டு மூன்று முறை செல்லில் அழைத்து எக்கச்சக்க அறிவுறைகளை இலை மறை காயாக வாரி வழங்கினாள். மதுவுக்கு தான் ஒரு கட்டத்துக்கு மேல் எரிச்சலாகி விட்டது.