நிசப்தமான இரவில் ஈசல்களின் சிறகோசை கேட்டுக் கொண்டிருந்தது. மழை பெய்து சிறிது நேரத்துக்கு முன்பு தான் விட்டிருக்க, ஐன்னாவின் மனதுக்குள் புயலொன்று அடித்து ஓய்ந்திருந்தது.
சமையலறையில் பாத்திரங்களை எல்லாம் கழுவிக் கவிழ்த்து விட்டு வீட்டின் மின்விளக்குகளையும் அணைத்தவள் படுக்கையறைக்குள் நுழைந்தாள். ஹனானும் ஹம்தானும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைப் பார்த்ததும் ஹனானுடன் இன்றைக்குப் பேச இயலாது என நினைத்துக் கொண்டு விளக்கையணைத்து விட்டு வெளியே வந்தாள்.
அன்று மாலை நேரம் நன்கு உறங்கியிருந்ததால் அவளை நித்திராதேவி தனியே விட்டுச் சென்றிருந்தாள். இன்னும் இரண்டு மணித்தயாலங்களுக்குத் தூக்கம் வரப் போவதில்லை என்பதைத் தெரிந்து கொண்டு, அருகில் கிடந்த நூற்பந்தையும் ஊசியையும் எடுத்துக் கொண்டு அரைவாசி பின்னி வைத்திருந்த பையைப் பின்ன ஆரம்பித்தாள்.
இது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு. பக்கத்து வீட்டுச் சின்னப் பிள்ளைகளுக்கு எல்லாம் வண்ண வண்ணமாக சட்டையும் தொப்பியும் பின்னிக் கொடுத்திருந்தாள். அதனாலோ என்னவோ அந்தச் சுட்டிச் சிறுவர்களின் மனங்களில் இலகுவாக இடம்பிடித்துக் கொண்டாள். அடிக்கடி இங்கு வந்து போவதுடன், ஹம்தானுக்கு நெருக்கமான நண்பர்களாகவும் ஆகி விட்டிருந்தனர்.
ஹனான் வீட்டுக்கு வருவதற்கு சில நிமிடங்கள் முன்பு தான் அவளது உயிர்த்தோழி அமீரா அவளை வந்து சந்தித்து விட்டுப் போயிருந்தாள். பள்ளிக்கூடக் கதைகளைப் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போவதே தெரியவில்லை. அமீரா, ஜன்னா மற்றும் ஹயாத் போடும் அளவில்லாத சேட்டைகளை நினைவுபடுத்தி தோழியர் சிரித்துக் களைத்தனர். ஹயாத்தும் அவ்வளவு காலம் தம்முடன் இருந்து விட்டு சொல்லிக் கொள்ளாமலே பிரிந்து சென்று விட்டதை நினைத்து கவலைப்படவும் செய்தனர்.
"எவ்வளவு ஈசியா எங்கள எல்லாம் மறந்துட்டு போயிட்டா இல்லயா ஜன்னா?" அமீரா தான் கேட்டாள்.
![](https://img.wattpad.com/cover/330257645-288-k632984.jpg)
YOU ARE READING
காயம்✔️
Spiritualகவலைகளே இல்லாமல் சிட்டாய்ப் பறந்து திரிந்தவள் மனதில் ஒரு காயம் ஏற்படுத்தப்பட்டு விடுகிறது. அது எவ்வாறு ஏற்பட்டது, யார் அதனை ஏற்படுத்தியது, பின்னர் அந்தக் காயம் எப்படி ஆறியது என்பதே இக்கதை. '''_இருவருடைய உள்ளங்களிலும் இரண்டு விதமான சலனம். ஹயாத்தின் ம...