உமா வழக்கம் போல பள்ளிக்கு வந்தாள். வகுப்புகள் தொடங்கியதும்.. தான் வகுப்பு ஆசிரியை ஆக இருக்கும் மூன்றாம் வகுப்பிற்கு சென்றாள் உமா.
குழந்தைகளின் பெயரைச் சொல்லி.. வருகை பதிவேட்டை பூர்த்தி செய்தாள் உமா. "சுஜி நேற்றும் வரவில்லை.. இன்றும் வரவில்லை.. என்னவாக இருக்கும்.. வகுப்பு முடிந்ததும் அவள் அம்மாவிற்கு போன் செய்ய வேண்டும்.." என மனதில் எண்ணமிட்டாள் உமா.
உமா பாடம் நடத்த தொடங்கிய சில நிமிடங்களில்.. சுஜியை அவள் அம்மா அழைத்து வந்தார். சுஜி அழுது கொண்டிருந்தாள். அவள் முகத்தில் பயம் தெரிந்தது.
என்னவென உமா விசாரிக்க.. "ஸ்கூலுக்கு போகமாட்டேன்னு ஒரே அழுகை.. நேத்து எனக்கும் ஆபிஸ் லீவு.. அதான் அழுறானு வீட்டிலே இருக்கச் சொன்னா.. இன்னைக்கும் அதே சொல்றா. நாலு அடி போட்டு இழுத்துட்டு வந்துருக்கேன்.." என விவரித்தார்.
அதற்கு மேல் தனக்கு நிற்க நேரமில்லை என்பது போல வேகமாக சென்றுவிட்டார் சுஜியின் அம்மா.
சுஜி நல்ல பொண்ணு தான்.. வேலைக்கு செல்லும் அம்மா அப்பா.. அவர்களின் அன்பு கிடைக்காமல் இப்படி பிடிவாதம் பிடிக்கிறாள் போல.. என நினைத்தாள் உமா.
வகுப்பு முடிந்ததும் சுஜியை தனியாக அழைத்து பேசி.. இதை நிற்க நேரமின்றி ஓடும் அவள் அம்மாவிற்கும் புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்.. வகுப்பு முடிந்ததும் சுஜியை அழைத்தாள் உமா.
திருதிருவென பயத்துடன் விழித்தபடி சுஜி உமாவின் முன் அமர்ந்திருந்தாள்.
"சுஜி.. நீ ரொம்ப நல்ல பொண்ணு தான.." என உமா பேச்சை தொடங்க.. ம் என தலையசைத்தாள் சுஜி.
"ஸ்கூலுக்கு லீவு போடாம வர்றவங்க தான குட் கேர்ள்.. அப்புறம் ஏன் நீ ஸ்கூலுக்கு வரமாட்டேன்னு சொல்ற.." என உமா கேட்க.. சுஜி.. "அ.. அது.. மிஸ்.." என அழுதாள்.
அவள் கண்ணீரை துடைத்துவிட்டபடி.. "அழக்கூடாது டா.. ஸ்கூல்ல மிஸ் யாரும் எதுவும் சொன்னாங்களா.." என தனக்கு தோன்றிய எல்லா காரணங்களையும் உமா கேட்டாள்.