அன்றைய நாள் வழக்கம் போல பள்ளிக்கு கிளம்பினாலும்.. மனதில் ரஞ்சனை எப்படி எதிர்கொள்வது.. தான் நேற்று நடந்து கொண்ட விதத்திற்கு அவன் என்ன சொல்வானோ.. என எண்ணிக் கொண்டிருந்தாள் உமா.
“என்னடா ஏதோ யோசிச்சிட்டே இருக்க..” என சுசீலா கேட்க.. “ஒன்னுமில்லை மா.. மேகலா டீச்சர் பையன் இன்னைக்கு ஸ்கூல் கரஸ்பாண்டட் ஆகப்போறாரு.. அவர் வருவான்றதால ஸ்கூல்ல எல்லா ஏற்பாடும் நடந்துட்டு இருக்கு.. அதான் நான் எதாவது செய்யாம விட்ருக்கேனானு யோசிச்சிட்டு இருந்தேன்..” என சமாளித்தாள் உமா.
“அதான் சீக்கிரம் ஸ்கூலுக்கு போய்டுவல்ல.. அங்க போய் செக் பண்ணிக்கோ.. இப்ப சாப்பிடு..” என்றார் சுசீலா.
பள்ளி விழாக்கோலம் பூண்டிருந்தது. உமாவின் மனதின் ஓரத்தில் ரஞ்சன் தன்னிடம் எப்படி நடந்து கொள்வானோ என்ற பதைபதைப்பு இருந்தாலும் சாதாரணமாக தன் வேலையை கவனித்தாள்.
ரஞ்சன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த நாள் ஒரு சந்தோஷமான நிகழ்வு.. அடுத்த தலைமுறையாக ரஞ்சன் தங்கள் பள்ளியை பொறுப்பேற்க போகும் பெருமிதத்தில் திளைத்தனர் அனைவரும்.
குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக கோவிலுக்கு சென்று.. ரஞ்சனின் பெயருக்கு அர்ச்சனை செய்தனர்.
சிவநாதன் கமலா திலீபன் மேகலா தம்பதியருடன் ரஞ்சன் பள்ளிக்கு வந்தான். அவனுக்கு வரவேற்பு அளிக்க ஒவ்வொரு வகுப்பின் சார்பிலும் குழந்தைகள் பொக்கே கொடுத்து வெல்கம் சொன்னனர்.
ரஞ்சனும் முகமலர்ச்சியுடன் நன்றி சொல்லி பொக்கேவை பெற்றுக் கொண்டான்.
ரஞ்சனுடன் வந்து கொண்டிருந்த அவன் பெற்றோரின் முகத்தில் இருந்த சந்தோஷத்தை ரசித்துக் கொண்டிருந்த உமா.. “மேகலா டீச்சரும் திலீபன் சாரும் எவ்ளோ சந்தோஷமா இருக்காங்க.. பின்ன இருக்காதா..” என நினைத்தாள்.
அவர்களின் மகிழ்ச்சியை கண்டு புன்சிரிப்புடன் ரஞ்சனின் முகத்தை பார்த்தாள் உமா. அதே வேளையில் ரஞ்சனும் உமா முகத்தைக் கண்டு.. இதழ்களில் குறுநகை தவழ.. அவன் கண்களிலும் அந்த சிரிப்பு எதிரொலிக்க பார்த்துக் கொண்டிருந்தான்.