-45-

772 40 1
                                    

மரண வீட்டுக்கு போய்வந்ததால் வெளியிலிருந்த குழாயில் நன்றாக முகம், கைகால்களை கழுவிவிட்டே இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர்.

அறையிலிருந்து டவலை எடுத்துவந்து ரய்யானிடம் நீட்டினாள் ஹிக்மா. மனைவிமீது துளிர்த்த கோபத்தால் அவளை நிமிர்ந்து பார்க்காமலே வாங்கிக்கொண்டான். ரய்யானின் செய்கை ஏனோ அவளுக்கு வித்தியாசமான உணர்வை தர ஒருமுறை நோக்கிட மாட்டானா என்று துவட்டி முடிக்கும்வரை அவனையே பார்த்திருந்தாள். அது தெரிந்ததுபோல அவன் அவளை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. தன்செயல் அவளைப் பாதிக்கும் என்று உணரவுமில்லை.

அதற்குள் சுலைஹா சுடச்சுட தேநீரோடு வந்து அழைக்க ஹிக்மா மனதில் வலியோடு அவரிடம் திரும்பினாள்.

தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போதே ஹிம்னா வந்துசேர்ந்தாள். நீண்டநாளைக்குப் பிறகு சகோதரியை கண்ட மகிழ்ச்சியில் கட்டிக்கொண்டு கொண்டாடினாள்.

ரய்யானின் பேச்சுத்துணைக்கு ஹிஜாஸ் வீட்டிலிருந்தது வசதியாகப் போயிற்று.

குடித்து முடித்த காலிக் கோப்பைகளை எடுத்துப்போய் கழுவிக் கவிழ்த்தாள் ஹிக்மா. ரய்யானின் ஒதுக்கம் அவளை வெகுவாகப் பாதித்தது. வரும்போது இருந்த மகிழ்ச்சியை இப்போது துளியும் அவளால் உணர முடியவில்லை.

'ஒருவேளை அவனுக்கு இங்கே வந்தது பிடிக்கவில்லையோ. நான் கூட்டிப்போக சொல்லி கேட்கவில்லையே. அவனாகத்தானே கூட்டிட்டு வந்தான். இதுக்கு கூட்டிவராமலே இருந்திருக்கலாம்' என்றிருந்தது அவளுக்கு.

சுலைஹா ஹிக்மாவிடம் சாப்பிட்டுவிட்டு போகும்படி வேண்டிக்கொள்ள மனதில் உள்ள கவலையில் ஹிக்மா அவரின் கோரிக்கையை மறுத்தாள்.

"சாப்பிட்டு போனா லேட்டாகும்மா. காலைல ஸுகூலுக்கு வேற போகனும். இன்னொருநாள் பார்க்கலாம்"

"அப்படி லேட்டாகாது. ஒரு மணித்தியாலத்தில சமைச்சிடுவன். இருந்து சாப்பிட்டே போங்க. மருமகனும் வந்திருக்காரு. அப்படி சும்மா அனுப்பலாமா?"

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now