ஒருவாரம் கடந்திருந்தது. வீட்டில் ஒளிர்மதியோடு வலம்புரி தவிர்ந்து யாரும் பேசவில்லை. சங்கீதாவுமே தன்னிடம் கூட மகள் ஒருவார்த்தை சொல்லவில்லையே என்று கோபத்தோடு தான் இருந்தார். தங்கைகள் இருவரும் தாயை போலவே, அதே காரணத்தோடு உம்மென்று சுத்தினர். பாட்டி, தாத்தாகூட அதே நிலையில் தான் இருந்தனர். ஆனால் உணவு வேளையின் போது ஒளிர்மதி அங்கு இருக்க வேண்டும், அவள் தான் பரிமாற வேண்டும்.
யார் எப்படி அவளை ஒதுக்கினாலும், அலட்சியம் செய்தாலும் அவற்றையெல்லாம் கவனத்தில் வைக்காமல் தனது கடமை செவ்வென செய்து, தனது பயணித்திற்கான வேலையில் மும்மரமாக இருந்தாள் ஒளிர்மதி. அவ்வப்போது அவளது வசுமதி அத்தை பற்றிய கேள்விகள் மனதையும் மூளையையும் குழப்பினாலும், இப்போதைக்கு இங்கிருந்து புறப்பட வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி, பிற எண்ணங்களை புறம் தள்ளுவாள்.
அன்று ஒளிர்மதி புறப்பட வேண்டிய நாள். அவளால் யார் மனதையும் மாற்ற முடியவில்லை. நியாயமான அவளது காரணங்களை கேட்க பெற்ற தாயே தயாராக இல்லை எனும்போது மற்றவர்கள் கேட்பார்களா? வலம்புரி மட்டுமே மகளுக்கு ஆதரவாக இருக்கிறார்.
கூடத்தில் தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு வந்தவளை, விடைக்கொடுக்க கூட ஆளில்லை. காலையிலே தங்கைகள் இருவரும் கல்லூரி சென்றுவிட்டனர். கணக்கு வழக்குகள் அல்லது புதிய பர்னிச்சர் பற்றி பேசவே கடைக்கு போகும் தாத்தா இன்று வேண்டுமென்றே கடைக்கு புறப்பட்டிருந்தார். பாட்டியும் சஷ்டியை காரணம் காட்டி அம்மாவை இழுத்துக்கொண்டு இருவருமாக கோவில் சென்றுவிட்டனர். ஆக! ஆடிட்டர் வலம்புரி, ப்ரபசர் அமுதன் மட்டுமே அவளோடு உள்ளனர். நினைக்கவே கசந்த முறுவல் பூத்தது.
தன்னை புரிந்துக்கொள்ளாத இவர்களோடு இனியும் இருந்து என்ன பயன் என்ற விரக்தியோடு ஆத்திரமும் எழ, விருட்டென்று வீட்டிலிருந்து வெளியேறினாள்.
காரின் ஓட்டுனர் இருக்கையில் அமுதனும் பக்கத்தில் வலம்புரி, பின்னே ஒளிர்மதி அமர்ந்திருக்க, கார் புறப்பட்டது.