தனது கைகளை பரபரவென தேய்த்து கண்களில் ஒற்றிக்கொண்டு, விழிகளை திறந்தாள் ஒளிர்மதி.
எப்போதாவது தாமதமாக எழுந்துவிட்டால்...
'இன்னும் எழுந்துக்கொள்ளவில்லையா?
பெண்பிள்ளை இத்தனை நேரம் தூங்குவதா?
சூரியன் வருவதற்குள் எழத்தெரியாதா?', போன்ற கடுகடுக்கும் பாட்டியின் குரலோ,தாமதமாக எழுந்தால் குற்றவாளியை காண்பது போல் வீசப்படும் தாத்தாவின் பார்வையோ,
மஞ்சள், மிளகு தட்டிப்போட்ட பால், தண்டனையாக கெஞ்சிய பிறகே கிடைக்கும், தயாரிக்கும் அன்னையின் கை மணமோ,
தந்தை புன்னகையோடு சொல்லும் காலை வணக்கமோ,
உடன் பிறந்தவர்களின் சேட்டையோ...
இது எதுவுமே அவளது நிழலை கூட தீண்டாத தூரம் வந்திருந்தாள் ஒளிர்மதி.
சகல வசதிகளோடு அடுக்குமாடி குடியிருப்பில் அவளுக்கே அவளுக்கான தனிவீடு, பிடித்த வேலை என தனது உலகின் ராணி அவளே! அவள் ஆசைப்பட்டதும் இவ்வாழ்க்கையை தான். ஆனால்...! அதற்கு மேல் யோசிக்க விரும்பாதவளாக படுக்கைவிட்டு எழுந்துக்கொண்டாள்.
பல் துலக்கி, முகம் கழுவியவள், அந்த நவீன அடுக்களைக்குள் நுழைந்தாள். காபி மேக்கர் தயாரித்து தந்த காபியோடு பால்கனி பக்கம் வந்தவள், தடுப்பாக போட்டிருந்த கம்பி மேல் ஒரு கையை ஊன்றியபடி, மறுகையில் காபி அருந்த துவங்கினாள், வேடிக்கை பார்த்துக் கொண்டே.
"அம்மா! எதுக்கு இப்போ காபி தர்ற?"
"ஏன்டி! வீட்டுல எல்லாருக்கும் தனித்தனியாவா செய்ய முடியும். தலைக்கு மேல வேல மண்டைய உருட்டுது. இந்த அழகுல நீ வேற வந்து அதிகாரமா பண்ற?"
"ம்க்கும்! நான் கேட்ட பால் டம்பளர்ல ஊத்தி தரதுல, அப்டி ஒன்னும் லேட் ஆகிடாதும்மா!", என்பாள்.
என்னதான் வாய் திட்டினாலும், அவளது அம்மாவின் கைகள் அவள் கேட்ட மஞ்சள் தூள், மிளகுதூள் தட்டிப்போட்ட பாலை தயாரிக்கும். அதிலும் ஒரு ஸ்பூன் அளவு மட்டுமே சக்கரை இருக்க வேண்டும். அதிக தித்திப்பு இருந்தால் பாலை குடிக்கமாட்டாள். அவளுக்காக அத்தனை மெனக்கெடல் செய்ய வேண்டும்!