அன்பன்னுக்கு கல்லூரி நான்கு மணி போல் முடிந்துவிடும், அவன் எப்போதுமே வீட்டிற்கு தாமதமாக வருபவன் இல்லை. அதனாலே நம்பிக்கையாக அவனை காண கிள்ளிவளவன் இல்லம் வந்தாள்.
வீட்டில் ஆள் இருப்பதன் அடையாளமே இல்லை, யோசனையாக அத்தை என வண்ணமதியை அழைத்தபடி சமையலறை, தோட்டம், மாடி என தேடியபடி ஏறியவள், மேலே வர கிள்ளிவளவனின் குரல் கேட்கவும், மாமா என்ற அழைப்போடு சந்தோஷமாக அவ்வறைக்குள் வந்தவள், அங்கு கண்ட காட்சியில் ஸ்தம்பித்து போனாள்.
கிள்ளிவளவன் குடித்துக்கொண்டிருந்தார். பொதுவாகவே குடிபழக்கம், புகைப்பிடித்தல் எல்லாம் ஒளிர்மதி பார்வையில் பெரும் குற்றம். அப்படியிருக்க, அவள் யாரை மிகுந்த நல்லவர் என நம்பினாளோ அந்த அத்தை கணவன், அவளது இசை மாமா மற்றும் அமுதனின் தந்தை... அவர் மொடாக்குடிகாரன் போல் இருப்பதை கண்டு மனதில் கலக்கம் தோன்றியது.
திரும்பி போய்விடலாம் என நினைத்தவள், சத்தம் வராமல் வெளியேறப்போக, அதற்குள் கிள்ளிவளவன் அவளை பார்த்துவிட்டார். நரியிடம் மாட்டிய முயலாகிப்போனாள் ஒளிர்மதி.
"அடடே ஒளிரு கண்ணு! உள்ள வா!", என பாசத்தோடு கொஞ்சலாக அழைக்க, தடக் தடக்கென மனம் அடித்துக்கொள்ள, ஏதோ ஒரு குரல் அபாயத்தொனியில் ஓடிவிடு என மனம் அறிவுறுத்தியது. மனம் பேச்சை உடனே கேட்டுவிட்டால் மனிதனில்லையே! மனம் கூறுவதை கண்டும் காணதவளாக, தயங்கி தயங்கி அவர் அருகே வந்தவளை, கைப்பிடித்து இழுத்து தன்னருகே அமர்த்திக்கொண்டார்.
மது நாற்றம் அவளை மூச்சுவிட முடியாமல் செய்ய, அதைவிட அருவருப்பாக இருந்தது, அவளது தோளில் இறுக்கமாக சுற்றியிருந்த அவரது கைகள். அது இங்கிதமான செயலாக அவளுக்கு தோன்றவில்லை, அத்தோடு அவரது வெற்றுடல் அவளது தோளை உரசும்போது, அவளுக்கு ஏதோ தீ சுட்டது போல் இருந்தது.
"என்ன விஷயம் கண்ணு?", அதே பாசக்குரல். ஆனால் ஏதோ ஒரு வித்தியசமான பார்வை.
"அது மாமா... இ... இன்னிக்கி என் பர்த்டே... அ... அதான் இசை...", என தொடங்கியவள் பின், "அத்தைய பாத்துட்டு போகலாம்னு...", என முடிக்காமல் நிறத்தினாள்.