3 - ஸைனப் அல் பஷரீ

112 20 25
                                    

அதிகாலை எட்டு மணிக்கு முன்பே காலையுணவை அனைவரும் சேர்ந்து உட்கொண்டு விட்டு பல்கலைக்கழகம் செல்வதற்காகத் தயாராகினர்.

ஸைனப் நேற்றிரவு கூறியதற்கிணங்க போகும் வழியில் நஹ்லா வந்து அவளுடன் இணைந்து கொண்டாள்.

"என்ன விடயம் ஸைனப்?" என்ற நஹ்லாவைப் பார்த்துப் புன்னகைத்தவள்,

"அது... நமது அடுத்த கூட்டத்தை நடாத்துவது பற்றித் தீர்மானிக்க வேண்டும். ஷேஃக் ரய்யான் அல் நழ்ர் அவரது பெண்கள் கல்லூரி விழாவில் உரையாற்றுவதற்கு நமது சங்கத்திலிருந்து ஒரு நல்ல பேச்சாளரைக் கேட்டிருக்கிறார். அவர் வந்து எம்முடன் கதைப்பதாகக் கூறினாராம். அதைப் பற்றியும் அடுத்த கூட்டத்தில் கலந்துரையாட வேண்டும்" என்று சிந்தனையில் ஆழ்ந்தாள் ஸைனப்.

"அடுத்த கூட்டத்தை இன்னும் ஒரு வாரத்துக்குள் நடாத்துவது தான் சிறந்தது. அப்போது தான் அடுத்து செய்யப் போகும் விடயங்கள் பற்றி திட்டமிடலாம். ஆம்... உன்னை விடச் சிறந்து பேச்சாளர் யாரிருக்க முடியும்?" என்றாள் கமரிய்யாவின் உப தலைவியான நஹ்லா.

அதைக் கேட்டதும் ஸைனபின் முகத்தில் அதே புன்னகை அரும்பலாயிற்று. "இன் ஷா அல்லாஹ் பார்க்கலாம்" என்று விட்டு மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

ஸைனபின் பேச்சாற்றலும் நாவன்மையும் அனைவராலும் பேசப்படும் ஒரு விடயமாக மாறிக் கொண்டிருந்த காலமது. அவளைத் தெரியாதவர்களுக்கும் அவளது இந்தத் திறமை பற்றி நன்கு தெரியும்.

"சென்ற வாரம் நடந்த பயிற்சி முகாமில் உரையாற்றும் போது உமாரா சொதப்பி விட்டது போன்று மீண்டும் நடந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது அன்று பலரின் விமர்சனத்துக்கு உள்ளாகியது" என்று வீதியைக் கடந்து முடிந்ததும் நஹ்லா கூறினாள்.

"பாவம் அவள் என்ன செய்வாள்? எல்லா மனிதர்களுக்கும் தவறு நடக்கிறது தானே? அதை ஏன் இவர்கள் இப்படி விமர்சிக்கின்றனர்? ஆயினும், நமது முயற்சி போதாது தான். அடுத்த முறை இப்படி ஏதும் நடந்து விடாமல் செய்வோம் இன் ஷா அல்லாஹ்" என்றாள் ஸைனப்.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now