33 - கமரிய்யா

61 14 12
                                    

ஸைனப் அல்அம்ரீ பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் முதல் நாளும் வெகு சீக்கிரத்திலே வந்தது. அவளை அழைத்துச் சென்று சேர்த்து விட்டு வந்திருந்தான் மஸ்லமாஹ். அனைவரும் வழக்கம் போல தத்தமது தொழில்களைக் கவனிப்பதற்காக வெளியேறிச் சென்றிருக்க, ரிழாவும் சலமாவும் பிள்ளைகளுடன் வீட்டிலிருந்தனர்.

கமரிய்யாவின் அலுவலகம் எனும் பெயர் தாங்கியிருந்த சிறிய அறையை இப்போது அந்த இடத்தில் காண முடியாது. அந்த அறையிருந்த அடையாளமேயின்றி அவ்விடம் தரைமட்டமாக இருந்தது.

கமரிய்யாவின் பணிகளை மேற்கொள்வதற்கெனப் பாழடைந்த பழைய கட்டடமொன்றை அவர்கள் சுத்தம் செய்து எடுத்திருந்தார்களே? அதையும் காணவில்லை இப்போ. ஆனால் அதற்குப் பதிலாக, உயர்ந்த பச்சை வர்ணச் சுவர்களுடன் கூடிய கட்டடமொன்று நெஞ்சுரத்துடன் நிமிர்ந்து நின்றிருந்தது.

கண்ணாடி யன்னல்கள் காற்றுக்கு ஆடாதபடி அவற்றைக் கொழுக்கிகள் கொண்டு அசையாது செய்திருந்தனர். 'கமரிய்யா' என்ற பெயர்ப்பலகை ஒரு வருடம் பழையதாயினும் புன்னகை தாங்கி வாயிலில் வீற்றிருக்க, உள்ளே பெண்களின் பேச்சுக்குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன.

"ஸைனப், உனது கணவர் என்ன சொல்கிறார்?" தன் முன்னே மேசையிலிருந்த குறிப்பேட்டில் பேனை மையை அளவோரு சிந்தியபடி மணி மணியாக ஏதோ எழுதிக் கொண்டிருந்த அப்ரா தான் வினவினாள்.

"ஆமாம் நானும் கேட்க நினைத்தேன். என்ன சொன்னார்?" என்று தன் பங்குக்கு ஹம்தாவும் கேட்டு வைக்க,

"அவருக்கும் ஹாபிழ் உஸைதுக்கும் இவ்விடயத்தில் சம்மதம் தான். மற்றவர்களுடனும் கூடிக் கதைத்து விட்டுத் தான் முடிவு செய்ய வேண்டுமென்றார்" என்ற ஸைனபின் பதிலுக்குக் கூடியிருந்தவர்கள் தலையசைத்தனர்.

நாளை நடாத்துவதற்குத் தீர்மானித்திருந்த சிறுவர்களுக்கானப் பேச்சுப் போட்டியைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தவர்கள், மண்டபத்தை ஒழுங்குபடுத்தி அழகான சிறிய மேடையொன்றையும் அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now