وَإِذْ جَعَلْنَا ٱلْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَأَمْنًا وَٱتَّخِذُوا۟ مِن مَّقَامِ إِبْرَٰهِۦمَ مُصَلًّىۖ وَعَهِدْنَآ إِلَىٰٓ إِبْرَٰهِۦمَ وَإِسْمَٰعِيلَ أَن طَهِّرَا بَيْتِىَ لِلطَّآئِفِينَ وَٱلْعَٰكِفِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ
"(கஃபா எனும்) இவ்வீட்டை மக்கள் ஒன்றுகூடும் இடமாகவும், அபயமளிக்கும் இடமாகவும் நாம் ஆக்கியதை (எண்ணிப் பாருங்கள்). நீங்கள் மகாமு இப்ராஹீமைத் தொழும் இடமாக எடுத்துக் கொள்ளுங்கள். எனது வீட்டைத் தவாப் செய்வோருக்காகவும், தங்கியிருப்போருக்காகவும் ருகூஉ, சுஜூது செய்பவர்களுக்காகவும் நீங்கள் இருவரும் தூய்மைப்படுத்துங்கள் என இப்ராஹீமுக்கும் இஸ்மாஈலுக்கும் நாம் கட்டளையிட்டோம்" (2:125)
அல்லாஹ்வின் வீடான மஸ்ஜிதுல் ஹராமில் தனது துணைவிக்குப் பக்கத்தில் கால்களை மடித்து அமர்ந்தவாறு தனது குர்ஆனை அவளிடம் ஓதிக் காட்டி சரிபார்த்துக் கொண்டிருந்தான் மஸ்லமாஹ் அல்அம்ரீ.
சூரதுல் பகரா, அல்குர்ஆனின் மிகப்பெரிய அத்தியாயம், அதன் ஒவ்வொரு பக்கமும் கூறும் ஒவ்வொரு விடயமும் அவர்களிருவரினதும் நெஞ்சங்களில் ஆழமாகப் பதிந்து அல்லாஹ்வின் இணையற்ற ஆற்றலையும், அத்தாட்சிகளையும் எடுத்துரைத்தன.
மெய்மறந்து செவிமடுத்துக் கொண்டிருந்த ஸைனப் அவன் அத்தியாயத்தின் இறுதி வசனத்தை ஓதி முடித்ததும் திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள். ஒரு பொழிவும், அழகும், அமைதியும் ஒருங்கே சேர்ந்தாற் போன்ற வட்ட முகம். அதில் நிலவிய சாந்தியைக் கண் கொட்டாது பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது.
அவள் பார்வையைக் கண்டு நகைத்தவன் கஃபாவை நோக்கித் தனது கண்களை நகர்த்தினான். நேற்று வந்து முதன்முதலில் அங்கு காலடி எடுத்து வைத்த போது, கஃபாவைக் கண்களால் கண்ட தருணம், உள்ளத்தை ஊடுறுவிய உணர்வுகளை மீட்டிப் பார்த்தான்.
இரண்டாவது நாள் இன்று, உம்ராவின் கடமைகளை முடித்திருந்தவர்கள் மஃரிப் தொழுகைக்காக மஸ்ஜிதுக்கு வந்திருந்தனர். இஷா அதான் வரை அங்கு தூணில் சாய்ந்தவாறு அமர்ந்து ஒருவரிடம் மற்றவர் எனக் குர்ஆனை ஓதி மீட்டல் செய்து கொண்டிருந்தனர்.
![](https://img.wattpad.com/cover/228420073-288-k897292.jpg)
YOU ARE READING
ஔியைத் தேடி...✔
Spiritualஓர் அநாதைப் பெண் தன் வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களையெல்லாம் கடந்து ஓர் ஔியைத் தேடிப் பயணிக்கும் பாதை!