35 - தாங்கவியலாத வலி

52 15 15
                                    

வழமை போன்று தான் அன்றும் பகலவன் விண்ணுக்குப் புறப்பட்டான் எனினும் மிகவும் துன்பகரமானதொரு செய்தியை அள்ளியிறைக்கவே அந்த நாள் பிறந்தது போலுணர்ந்தனர் மஸ்லமாஹ்வும் ஸைனபும்.

வேலை, பொதுப்பணி என்று ஓயாமல் அலைந்து கொண்டிருந்ததில் தனது உடலைக் கவனிக்க மறந்து விட்டான் மஸ்லமாஹ். சில மாதங்களாகவே அவனுடைய உடற்சோர்வையும் பலவீனத்தையும் ஸைனப் அவதானித்துத் தான் வருகிறாள்.

அன்று வற்புறுத்தி அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தாள். மருத்துவ சோதனைகளெல்லாம் முடிந்து மருத்துவ அறிக்கைக்காக இருவரும் வெளியில் காத்து நின்ற சமயம் மஸ்லமாஹ் யாருக்காே அழைப்பொன்றை ஏற்படுத்திக் கதைத்துக் கொண்டிருந்தான்.

ஸைனபுக்கு அவனது உடல் நலத்தைப் பற்றி அச்சமாகவே இருந்தது. ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விடுமோ என்று தான் பயந்தாள். சிரமப்பட்டு உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு தனது சாப்பாத்துக் கால்களில் பார்வையைப் பதித்தவாறு அமர்ந்திருந்தாள்.

ஸிராதுல் முஸ்தகீமீயர் இப்போது தங்கள் வேலையைத் தொடங்கியிருப்பார்கள் போலும். காலை ஒன்பது மணியைக் கடந்து கடிகாரம் ஓரளவு வேகமாகவே ஓடிக் கொண்டிருந்தது.

உலர் உணவுகளை வீடு வீடாகப் பங்கிடும் வேலையை இன்று மேற்கொண்டிருந்தனர். வழக்கத்துக்கு மாறாக இருமடங்கு பணம் இம்முறை சேர்ந்திருந்தது. இரண்டு அமைப்புக்களையும் ஒன்றிணைத்தது எவ்வளவு நன்மையாகப் போய் விட்டது!

உணவுப் பொருட்களை வாங்கிப் பொதி செய்யும் வேலையை ஆண்கள் கச்சிதமாகச் செய்திருக்க, யார் கொடுத்தது என்று தெரியப்படுத்தாது இருப்பதற்காக உணவுப் பொதிகளைக் கொடுத்து நிகாப் அணிந்த பெண்களை ஒவ்வொரு வீட்டுக்கும் இருவரிருவராக அனுப்பி வைத்தனர்.

அதைப் பற்றியே உஸைதுடன் மஸ்லமாஹ் கதைத்துக் கொண்டிருந்தான். சில நிமிடங்களில் அழைப்பைத் துண்டித்ததும், தனது சப்பாத்தின் கோடுகளை ஆராய்ந்து கொண்டிருந்த ஸைனப் அவன் கண்களில் பட்டாள்.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now