விழிப்புணர்வு

40 2 1
                                    

பச்சை கம்பளத்தைத்

தன்னிலே

படரவிட்டு

பரமானந்தத்துடன்

துயில் கொள்கின்றாள் ..

புவி அன்னை.

இன்று  அவள் 

இறுதி யாத்திரைக்கு

தயாராகி விட்டாள்....

என்னமோ சொல்கிறார்கள்

என்னென்னமோ செய்கிறார்கள்

முடிவில் ஒன்றைமட்டும்

சொல்கிறார்கள்

உலகம் சமநிலை மாறியது 

என்பதைத்தான்.

 விசும்பின் துளி வீழ

காத்திருந்த பசும்புல்

இன்று

ஏந்திய  துளி

அமிலங்கொண்டதால்

மண்ணினுள் அமிழ்ந்து போகும்

கொடுமை பாரீர்....

முன்னெலாம் நாட்டை

துறந்தவர் 

வனவாசம் போனாராம்

இன்று வனமே

 குல நாசம்

கொண்டதென்ன சொல்ல...

நேற்று கதிரவனை மறைக்க

 ஓய்ந்த முகில் கூட்டமும்

இன்று வானை மொத்தமாய்

 மறைக்க

காத்திருக்கும்.....

கரியமில புகைக் கூட்டமும்..

நதிகள் வற்றிப் போய்

என் தாய் நிலத்தில்

தழும்புகளாய் 

தெரிகின்றன.....

 இமயத்தின் பனி மகுடம்

 பறிபோனதோ

 குமரிமுனை மீண்டும்

 கடலுக்குள் நடை பயில

 துடிக்கிறதோ

நெகிழியோ

என்னுள் ஊறும் விஷக்குமிழியோ

யார்  கண்டார்?

ஏவுகணை யுகம்

எனக்கு வேண்டாம்

ஏந்திய கணையிலே 

ஏவிய அம்பினால்

மணம்மேவிய மலரை

அன்பினள் கூந்தலில்

ஆழச் சொருகும்

யுகம் நொடியாயினும் அது போதும்

எனக்கென்ன வந்தது ?

என்றிருக்க முடியாமல் தவிக்கின்றேன்.

பொது நலங் கருதும் மாதுறவி 

நானல்ல

ஏனிந்த தவிப்பு ?

சோவியத்து 

கருங்கல் சிலையெல்லாம்

அமிலமழை குளியலிலே

உருகி    ஓடுகிறதாமே?

அவளோ ஐந்தடி 

பொற்சிலை....

கவலை யாருக்குத்தான் வராது.....

தாஜ்மகால்

வெண்பளிங்கு மண்டபமாம்

பாருக்கு பனிமலராம்

இன்று

புழுதிப் போர்வையில்

புகுந்து கொண்டதாமே

அத்தனை

பெரிய மாளிகையை

ஆட்கொண்ட  வாயுதேவன்

அடிக்கடி ஸ்பரிசிக்கும்

என் பாவை மேனி பாவந்தானே!

ஓசோனில் துளை

இட்டதோ இல்லையோ

அதை கேட்டபோதே 

என் இதயத்தில்

ஓட்டை விழுந்ததென்னவோ

 உண்மை

முன்போ

பிறை நிலவளவாய்

தெரிந்த அவள் 

வதனங் கூட

கண்ணுக்கு வசப்படவில்லை.

ஆகவே பூலோகவாசிகளே

புவியை காத்திடுங்கள்

எனக்காகவோ 

என் நேசித்தலுக்குரியவளுக்காகவோ

அல்ல

உங்களுக்கும் உணர்விருக்கும்...

உணர்வினில் காதலிருக்கும்

காதலுக்கு உருவுடன் உயிர் இருக்கும் 

அவர்களுக்காக

by பாலா

தென்றலில்     தேவதைகள்Where stories live. Discover now