பழகுதல் -
புதிய உறவுகளை
உடையதாக்கும் நிகழ்வு.
உரையாடல் -
புதைந்த உணர்வுகளை
மீட்டெடுக்கும் நெகிழ்வு
இரண்டும் அரங்கேறும்
இனியதொரு பெரும் மேடை
கல்லூரி .
நம்மை சிரிக்கவும்
நமக்காக அழவும்
என யோசித்துப் பார்க்க
நேரமும், காலமும்
துணையும்
இவ்விடத்தில் தான்
வாழ்கையில் வழிகாட்டியாக
பலபேர் இனி வரலாம்.
வழித்துணையாய்
கை கோர்க்க
வருபவர்கள் இங்கே தான்
புவி பெரும் நிலமென்று
நாளை விளங்கும்
நண்பர்கள் பிரிவால்
வருடத்திற்கு ஒரு முறையாவது
சந்திப்போம் எனும் சபதம்
காலச் சக்கரத்தில்
நசுங்கி போய்விடலாம்.
தொலைபேசி எண்கள்
தொடர்பு எல்லைக்கு
அப்பால் தொடர்பறுந்து
போய்விடலாம்.
தொப்புள் கொடி உறவும்
பத்து மாதந்தான் என
வியாக்யானம் பேசும்
நிலை கூட வரலாம்.....
ஓ ! என் பேசும்
கல்லூரி நாட்குறிப்பே.
நண்பனே
என்
ஒவ்வொரு நரம்புக் கூறும்
உன் பிரிவில்
எவ்வளவு சிதைந்ததென்று
விவரிக்க வரியற்றும்
வழிற்றும் கிடப்பதால்
விளை குணம் அதுவாகும்.
உன் புகைப்படமும்
நினைவுகளும்
கண்ணினை சுற்றி
கருவளையம் விளையும்
கடுந்துயர் காலத்தும்
குறுநகையும்
கண்பொழி நீரையும்
வருவிக்க தவறியதில்லை.
முதுமை எனும் கொடுமை
முதுகில் ஏறும் நிலையில்
கையில்
மூக்குக் கண்ணாடியும்
துணைக்கு
முகம் பார்க்கும் கண்ணாடியும்
என தனிமை சூழுமிடத்து
சுகம் தருவது
உன்னுடனான உணர்வுகள்
மட்டும் தான்...
பொது இடத்தில்
சக தோழர் தென்பட மாட்டாரா
என கண்கள் தேடி ஓயும்....
ஏழாம் பொருத்தமாய்
பழகியவன் கூட
பின்னோர் காலத்து
பெரும் உறவாய் தோன்றலாம்....
நீ திட்டிய வசை யாவும்
தேவ கானமாய்
பிறிதொரு நேரம்
இப்பிரிவு தோற்றுவிக்கலாம்.
ஏதடா நேரம்?
ஏனடா சோகம்?
என்னதடா வாழ்க்கை?
எனும் கேள்விகளூடே
என்னையும்
ஒரு சில நொடிகள்
நினைக்கத் தூண்டும்
உன் நெஞ்சத்தின்
உணர்வுகளுக்கு
நட்பின் சார்பில்
நன்றிகள் ஆயிரம்
இப்பிரிவு
தூரத்தால் விளையலாம்
உணர்வினில் நிகழுமெனில்
உயிர் பிரிந்த பிறகே தான்
YOU ARE READING
தென்றலில் தேவதைகள்
Poetryதிமிர் பிடித்து திரிகின்றாயா ஆண்களை திமிரப் பிடித்து கண்களால் தின்கின்றாயா? தென்றலில் தேவதையாக நீ தெரு வாடை காற்றில் நான் உணர்வுக் கவிதைகள் உங்களுக்காக