வகுப்பறை
பெயர்க்காரணத்தை இன்று தான்
அறிந்துகொண்டேன்
உன் நளினமோகனவதனத்தை
வகுத்துத் தனியே காட்டும்
காதலோவிய மாளிகையின்
கருவறை ஆதலினால்......
கல்லூரிச் சாலை அல்ல இது
என் "மனக் " கல் உரித்து
சிலை உற்பத்தி செய்யத் துணியும்
சிற்பகலைச் சாலை இது
இடையுள்ள நிலம் பிளந்து
புதை கொள்ளக்கூடாதோ?
உனக்கும் எனக்கும்
எத்தனை பெரிய இடைவெளி
என் சிந்தையோ
காற்றை கூட
நம் நடுவே
உலவ விடாதே
என்கிறது.....
இருக்கட்டும் இருக்கட்டும்
இடைநிற்பவர் தோழமை
புன்னகை கொண்டு
அமர்ந்துள்ளனர்.
இல்லையேல் இந்நேரம்
பரலோகத்தில் பரமபிதா பக்கத்தில்
பரமபதம் விளையாட
அத்தனை பேரையும்
அனுப்பிஇருப்பேன்.
வகுப்பறை கரும்பலகை... அதை
உன் கூந்தலுக்கு மாற்றச் சொல்லேன்
என் இரு விழி இழந்தாலும்
அத்திசை தவிர வேறெங்கும் நோக்கேன்...
உன் குறுஞ்சிரிப்பும்
என் கனாலோக சஞ்சரிப்பும்
நீ செய்யும் கலகலப்பும்
எந்தன் உணர்வுகளினிடையே கைகலப்பும்
உன் நெற்றிச் சிகை விலக்கும் விரலும்
என் நெடுஞ்சுவாச மூச்சும்
இரட்டை கிளவியோ
சொற்பொருள் நிலைமையோ
என் திருத்தோழரும்
நின் தவத்தோழியரும்
பிணி வந்தோ பிணக்கு வந்தோ
பிரிந்து போகக் கடவதாய்
என் பொறுமையை சோதித்த
பாவிகள் அவர்கள்...
தனிமை நம்மை சூழாது
சூழ்ச்சி செய்த சகுனிகள்...
என் இருக்கை தேய்ந்து
என் இரு கையும் தோய்ந்து
முன்னும் பின்னும் நகர்ந்து
என் முதுகெலும்பு நைந்து
உன் வதனம் காண
எத்தனை எத்தனை போராட்டம்...
ஒருக்கால்
என் நாற்காலிக்கு சக்கரங்
கட்டி விட்டால்
ஓய்ந்திடுமோ இத்தொல்லை.....
உன் கண்ணில் விழும்
பிம்பம் என் கண்ணில்
பிரதி எடுக்கும் தொலைவு
எங்கு வரும்?
என்று வரும்?
ஆணென்ன பெண்ணென்ன
எல்லாம் ஓரினந்தான்
புத்தக வரிகளை
நடைமுறைப்படுத்த
என்னருகே நீ
உன்னருகே நான்
எப்போது?
YOU ARE READING
தென்றலில் தேவதைகள்
Poetryதிமிர் பிடித்து திரிகின்றாயா ஆண்களை திமிரப் பிடித்து கண்களால் தின்கின்றாயா? தென்றலில் தேவதையாக நீ தெரு வாடை காற்றில் நான் உணர்வுக் கவிதைகள் உங்களுக்காக