12 மாற்றம் தந்த மயக்கம்
தன் முன்னால் சங்கர் நிற்பதைப் பார்த்து, சில நொடிகள் திகைத்து நின்றான் கிரி. அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. அவனுக்கு எதிரில் நிற்கும் மனிதரை அவனுக்கு பிடிக்காவிட்டாலும், அவரை அவன் வரவேற்றான்.
"வாங்க சார்..."
"நீ என்னை வரவேற்க மாட்டேன்னு நினைச்சேன்... நீ வரவேற்குறதை பார்த்து ரொம்ப சந்தோஷப்படுறேன்"
"நான் அர்ஜுனுடைய மேனேஜர். எப்போ, எப்படி நடந்துக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்" அவர் வாயை அடைத்தான் கிரி.
சங்கர் அங்கிருந்த சோபாவில் அமர, அவர் முன் நின்று கொண்டான் கிரி. அவர் ஏன் இங்கு வந்திருக்கிறார் என்பதை ஓரளவு ஊகித்துவிட்டான் கிரி.
"அர்ஜுனுக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னு கேள்விப்பட்டேன்..."
அவன் யூகம் சரியாக இருந்தாலும், அமைதியாக நின்றான் கிரி.
"என்னுடைய வாழ்க்கையில விதி எப்படி விளையாடுது பாத்தியா? என்னுடைய ஒரே மகனுடைய கல்யாணத்தை என்னால பாக்க முடியல"
அவர் அர்ஜுனுக்கும் சீதம்மாவிற்கும் செய்த துரோகத்தை எடுத்துக்கூறி, ஈவு இரக்கமின்றி, அவரை சாட வேண்டும் என்று துடித்தான் கிரி. ஆனால், அடுத்தவருடைய சொந்த விஷயத்தில் தலையிடுவது சரியல்ல என்று அமைதி காத்தான்.
"அர்ஜுனுக்குன்னு ஒருத்தர் கிடைச்சிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனா, என் மருமகளை வாழ்த்த கூட நான் அனுமதிக்க படல. நான் என்ன அவ்வளவு மோசமானவனா?" என்றார் நா தழுதழுக்க.
"அந்த விஷயத்துல நான் எதுவுமே பண்ண முடியாது சார். நீங்க உங்க மருமகளை வாழ்த்த நினைச்சா, அர்ஜுன்கிட்ட பர்மிஷன் வாங்கிகிட்டு அதை தாராளமா செய்யுங்க"
"நீ என்ன நினைக்கிற...? அர்ஜுன் என்னை அதை செய்யவிடுவான்னு நினைக்கிறாயா?"
பதில் சொல்லாமல் அமைதியாக நின்றான் கிரி. அவனுக்கு நன்றாகவே தெரியும், நிச்சயம் அர்ஜுன் அதற்கு சம்மதிக்க மாட்டான்.