10 எதிர் வினை
இந்துவுக்கு பழச்சாறு தயாரிக்க சமையலறைக்கு வந்தாள் ரம்யா. அந்த சாக்கை பயன்படுத்தி, கிரியிடம் பேசவும் அவள் திட்டமிட்டாள். வேலனிடம் பழச்சாறு தயாரிக்க சொல்லிவிட்டு, அவள் கிரிக்கு ஃபோன் செய்தாள்.
"சொல்லு ரம்யா"
"உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கத்தான் ஃபோன் பண்னேன். எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை"
"ஏதாவது பிரச்சனையா?"
"சீதாராணி இல்லதோட அட்ரஸ் வேணும்னு இந்து கேக்குறாங்க"
"எதுக்குன்னு நீ அவங்கள கேட்கலையா?"
"இல்ல... நான் எப்படி அவங்கள கேள்வி கேட்க முடியும்? யாருக்கோ குடுக்குறதுக்காக அவங்க கேக்குறாங்கன்னு நினைக்கிறேன். நான் கொடுக்கவா?"
"வேண்டாம்... கொடுக்காதே" என்று அலறினான் கிரி.
அதேநேரம்,
"குடு" என்று பின்னாலிருந்து ஒரு குரல் வர, திரும்பிப் பார்த்தாள் ரம்யா. அங்கு அர்ஜுன் நின்றுகொண்டிருந்தான்.
ரம்யா மட்டுமல்ல கிரியும் கூட அசந்து தான் போனான்.
"நீ அவளுக்கு அட்ரஸை கொடுக்கலாம். ஆனா, *சரியான அட்ரஸை* தான் கொடுக்கணும்னு எந்த அவசியமும் இல்ல..." என்று புன்னகை புரிந்தான்.
சரி என்று ரம்யா தலையசைக்க, மறு புறத்திலிருந்து புன்னகை புரிந்தான் கிரி.
"ஏரியாவை மட்டும் மாத்தி கொடு" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் அர்ஜுன்.
"அர்ஜுன் என்ன சொன்னார்னு நீ கேட்டியா?" என்றாள் ரம்யா.
"கேட்டேன். அர்ஜுன் சொன்னா, அப்பீலே கிடையாது. அவன் சொன்னத செய்"
"எனக்கு வேற ஒரு உதவியும் வேணும்"
"எதுவா இருந்தாலும் கேளு"
"எனக்கு ஹெல்ப் பண்ண இந்த வீட்டில யாராவது இருக்காங்களா?"
"எதுக்கு?"
"இந்துவை பொறுத்தவரைக்கும், நான் இந்த இடத்துக்கு புதுசு. எனக்கு அர்ஜுனை பத்தியோ, அவங்க குடும்பத்தை பத்தியோ எதுவுமே தெரியாது..."