4 விபரம்
அர்ஜுன் அளித்த விளம்பரத்திற்கு நல்ல பலன் கிடைத்தது. ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே ஏகப்பட்ட தொலைப்பேசி அழைப்புகளை பெற்றான் கிரி. இடைவிடாத அழைப்புகளால் அவன் திக்குமுக்காடிப் போனான். ஏனெனில், அவன் பெற்ற பெரும்பாலான தகவல்கள் பொய்யானவை. பணத்திற்கு ஆசைப்பட்டு, பலர் ஏதேதோ புளுகி தள்ளினார்கள். அனைவரையும், தகுந்த ஆதாரங்களுடன் நேரில் வந்து அவனை சந்திக்குமாறு கூறினான். சிலர் உண்மையாகவே சரியான ஆதாரங்களுடன் அவனை சந்தித்தார்கள். இந்து படித்த பள்ளியின் காவலாளி, அவள் வீட்டின் அருகில் இருக்கும் மளிகை கடைக்காரர், அவள் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் உதவியாளர், மற்றும் அவளுடைய அண்டை வீட்டுக்காரியான விமலா.
கிரி, அர்ஜுனுக்கு தகவல் தெரிவிப்பதற்கு அவனை கைபேசி மூலம் அழைத்தான். அனலாய் தகித்துக் கொண்டிருந்த தன் மனதை குளிர்விக்க, நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தான் அர்ஜுன். கிரி கூறியதைக் கேட்டு அவன் ஆர்வமானான்.
"நான் இந்துவை பத்தி எல்லா தகவலையும் சேகரிச்சிட்டேன்"
"தகவல் கொடுத்தவங்களை திருப்பி அனுப்பிட்டியா?"
"இல்ல. அவங்க இன்னும் இங்க தான் இருக்காங்க"
"நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வரேன்"
"அர்ஜுன்..." என்று இழுத்தான் பதட்டமாய்.
"எஸ்...?"
"நம்ம கொஞ்சம் ஃபாஸ்டா ஆக்ட் பண்ணணும்"
"எனிதிங் சீரியஸ்?"
"ஆமாம். நாளைக்கு இந்துவுக்கு கல்யாணமாம்"
"வாட்....?" என்றான் அதிர்ச்சியாக.
"அவங்களோட சித்தி, மனைவியை இழந்து, இரண்டு குழந்தைங்களோட இருக்கிற ஒருத்தருக்கு அவங்களை கல்யாணம் பண்ணி கொடுக்க போறாங்களாம்"
"வாட் த ஹெல்..." என்று உறுமினான்.
"நான் எல்லா டீடைல்சையும் கலெக்ட் பண்ணி இருந்தாலும், உனக்கு தேவைப்பட்டா, நீ அவங்களை என்கொயரி பண்ணிக்கலாம்"