பாகம் 27
சாய் மருத்துவமனை
எவ்வளவு முயன்ற போதிலும், இந்துவுக்கு தூக்கமே வரவில்லை. உண்மையில் சொல்ல போனால் அவளுக்கு தூங்க விருப்பமில்லை. அவள் கண்விழித்து பார்த்த பொழுது, அவள் கட்டிலின் அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி, ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். அவள் கண்விழித்ததை பார்த்து பதட்டமானான்.
"இந்து, என்ன செய்து உனக்கு? ஏதாவது கஷ்டமா ஃபீல் பண்றியா?"
இல்லை என்று தலை அசைத்தாள் இந்து.
"உனக்கு ஏதாவது வேணுமா?"
"ஒன்னும் வேண்டாம்" என்றாள் மெல்லிய குரலில்.
"ஏதாவது வேணும்னா என்னை கேளு"
சரி என்று தலை அசைத்தாள்.
ஏதும் பேசாமல், அவள் மேல் கூரையை பார்த்தபடி படுத்திருந்தாள். அவள் எதையோ யோசித்துக் கொண்டு இருக்கிறாள் என்று புரிந்து கொண்டான் அர்ஜுன். அவன், அவளை எப்படி எல்லாம் விரட்டி அடித்தான் என்று அவள் நினைத்துப் பார்க்காமல் இருக்க வேண்டுமே என்று அவன் பயந்தான்.
அப்பொழுது மருத்துவர் அந்த அறைக்குள் நுழைந்தார். நாற்காலியை விட்டு எழுந்து நின்றான் அர்ஜுன். இந்து எழ முயன்ற பொழுது, அவள் தோளை அழுத்தினான்.
"நீ எழுந்துக்க வேண்டியதில்ல. படுத்துக்கோ" அவனுடைய குரல் அவ்வளவு கனிவாய் ஒலித்தது.
ஒரு வேளை, நம் இந்துவின் காதுகளுக்கு சுவை மொட்டுக்கள் இருந்திருந்தால், அவனுடைய குரல் தேனாய் சுவைத்திருக்கும். ஆம், பேசுகிறேன் என்ற பெயரில், அவளுடைய காதில் தேனை வார்த்தான் அர்ஜுன்.
"இப்போ எப்படி இருக்கிங்க மிஸஸ். அர்ஜுன்?" என்றார் மருத்துவர்.
"நல்லா இருக்கேன் டாக்டர் "
"உங்களுக்கு பேசுறதுக்கு கஷ்டமா இருக்கா?"
"கொஞ்சம் இருக்கு"
"மருந்தை சரியா சாப்பிட்டீங்கன்னா, நாளைக்கு ஈவினிங்குள்ள க்யூர் ஆயிடும் "