8 அபாயமான அணுகுமுறை
மறுநாள் காலை
தனது பொறுமையை இழந்து கொண்டிருந்தான் அர்ஜுன். அறையை விட்டு வெளியே வராமல் பிடிவாதமாய் இருந்தாள் இந்து. அவள் சாப்பிடாமல் பட்டினி கிடப்பதையும், தன்னை வருத்திக் கொள்வதையும் அர்ஜுனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
அவன் வேலனை அழைத்தான்.
"சொல்லுங்க தம்பி"
"இந்துவை டிஃபன் சாப்பிட வர சொல்லுங்க. நான் அவளுக்காக காத்திருக்கேன்னு சொல்லுங்க. பதினஞ்சு நிமிஷத்துல அவ இங்க வந்தாகணும்"
"சரிங்க தம்பி"
அவள் என்ன சொல்லுகிறாள் என்று பார்த்துவிட்டு, அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க தயாராக இருந்தான் அர்ஜுன்.
சரியாக பதினைந்து நிமிடம் கழித்து, டைனிங் ஹாலுக்கு வந்தான் அர்ஜுன். ஆனால், அங்கு இந்துவை காணவில்லை.
"இந்து எங்க?" என்றான் வேலனிடம்.
"அவங்க கெஸ்ட் ரூம்ல இருக்காங்க"
"அவ சாப்பிட்டாளா?"
"இல்ல தம்பி. அவங்களுக்கு எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அவங்க உங்க கூட சாப்பிட மாட்டாங்களாம்"
தான் அமர்ந்திருந்த நாற்காலியை தள்ளிவிட்டு, எழுந்து நின்றான் அர்ஜுன். விருந்தினர் அறையை நோக்கி, ஓடிச் சென்று, அறைக் கதவைத் தட்டினான். அவன் கதவைத் தட்டிய சத்தம், இந்துவுக்கு எரிச்சலை தந்தது. தன் காதுகளை இறுக்கமாக மூடிக் கொண்டாள், அவன் முயற்சிக்கு எந்த மரியாதையும் தராமல்.
தன் முழு சக்தியையும் திரட்டி, அந்த கதவை எட்டி உதைத்தான் அர்ஜுன். அந்த முரட்டுத்தனமான உதையை பொறுக்க முடியாமல், அந்த கதவு தரையில் சாய்ந்தது. அந்த அறைக்குள் அனாயசமாக நுழைந்த அர்ஜுனை பார்த்து, அதிர்ச்சியடைந்தாள் இந்து. அவன் தன்னை நோக்கி வருவதை பார்த்து, பின்னோக்கி நகர்ந்தாள் பயத்துடன்.
ஒன்றுமே நடக்காதது போல், அவளைப் பார்த்து புன்னகைத்தான் குளிர்ச்சியாக.