பாகம் 18
வீணாவின் பதற்றம் அதிகரித்துக் கொண்டே சென்றது. அவள் கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தாள். ஏற்கனவே பத்து நிமிடங்கள் கடந்தாகிவிட்டது. இன்னும், இந்து அர்ஜுனின் அறையிலிருந்து வெளியே வரவில்லை. ஏன்? உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியவில்லையே. தன் கையைப் பிசைந்தபடி இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தாள்.
வேலன், அவளைப் பார்த்துவிட்டு, சமையலறையின் சுவற்றின் மீது சாய்ந்து கொண்டு, சிரித்தபடி நின்றிருந்த ரம்யாவையும் பார்த்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த கோப்பையில் இருந்த காபியை, சமையலறையின் சிங்க்கில் ஊற்றிவிட்டு அந்த கோப்பையை கழுவி வைத்தார் வேலன்.
"அட... ஏன் அதை வேஸ்ட் பண்ணீங்க?" என்று கேட்ட அவளை விசித்திரமாய் பார்த்தார் வேலன்.
"அந்த காபியை நீங்க குடிச்சி இருந்தீங்கன்னா, எந்த தொந்தரவும் இல்லாம, நிம்மதியா தூங்கி இருக்கலாம் இல்ல...?" என்றாள் கேலியாக.
"எனக்கு அந்த காபி வேண்டாம்பா" என்றார் அவர்.
"நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்றீங்க. உங்களுக்கு ரெஸ்ட் வேணும். அந்த காபி, உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுத்திருக்கும்"
"ஆனா என்னால அப்படி நிம்மதியா தூங்க முடியாது. அர்ஜுன் தம்பி, எப்ப வேணும்னாலும் என்னை கூப்பிடுவாரு"
"இன்னிக்கு அவர் உங்களை கூப்பிட மாட்டார்" என்று மனதில் நினைத்து கொண்டாள் ரம்யா.
வீணா தூக்க மாத்திரை பொடியை கலந்த காபி தான் அது. அவர்கள் இருவரும் தான், வித்யா, வீணா மீது கண் வைத்திருக்கிறார்களே.
அவள் சமையலறையை விட்டு வெளியே வந்து, வீணாவிடம் சென்றாள்.
"ஏதாவது பிரச்சனையா? நீங்க ரொம்ப டென்ஷனா இருக்கீங்களே?"
இல்லை என்று தலை அசைத்தாள் வீணா.
"நெஜமாவா சொல்றீங்க? என்னால நம்ப முடியலையே..."