Part 50

1.4K 86 12
                                    

பாகம் 50

கிரியினுடைய கடின உழைப்பை பூரணமாய் உணர்ந்தான் அர்ஜுன். ஏனென்றால், கல்யாண மாப்பிள்ளையை வேலை செய்ய விடக்கூடாது என்று, கிரியின் வேலைகள் அனைத்தையும் அர்ஜுன் செய்து கொண்டிருந்தான்.

எவ்வளவு சுலபமாய், இவ்வளவு நாள் கிரியிடம் கட்டளையிட்டு  கொண்டிருந்தான் அர்ஜுன்... அதை எவ்வளவு துரிதமாய் செய்து முடித்து கொண்டிருந்தான் கிரி... அதையெல்லாம், செய்து பார்க்கும் பொழுது தான், அதன் கடினம் அர்ஜுனுக்கு புரிந்தது. கிரியை நினைத்து அசந்து போனான் அர்ஜுன்.

திருமண நாள் வந்தது... மண்டபத்தில் எல்லா வேலைகளும் சரிவர நடந்து கொண்டிருக்கிறதா என்பதை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்தான் அர்ஜுன். தன் அறைக்குள் நுழைந்தவன், தனக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த வேட்டி சட்டையை பார்த்து,

"அய்யோ..." என்றான்.

அவனுக்கு சவால் விடக்கூடிய ஒரு பிரச்சனையை இந்து இப்பொழுது அவனுக்கு வழங்கியிருக்கிறாள். கலாச்சார உடையை அணிய வேண்டும் என்பது தான் அது. எப்பொழுதும் போல, அவன் கோட்டு சூட்டில் இருக்கக் கூடாது என்பது தான் அவள் கேட்டுக் கொண்டது. புலம்பியபடி குளியலறை சென்று, குளித்து விட்டு வந்தான். பெல்டால் வேட்டியை இருக்கமாய் கட்டி கொண்டான். இறுக்கமான கோட்டு சூட்டு அணிந்து பழக்கப்பட்ட அவனுக்கு, இடுப்பிற்கு கீழே ஒன்றுமே இல்லாதது போல் தோன்றியது. அந்த வேட்டி காற்றில் பறந்து, அவனுக்கு மேலும் சங்கடத்தைத் தந்தது. அது அவனுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. என்றாலும், அவனுடைய *ஹோம் மினிஸ்டர்* ரிடம் *முடியாது* என்று கூற அவனால் முடியாது. முடியாது என்று கூறினால் அவள் வருத்தப்படுவாள்.

"டேம் திஸ் ட்ரெஸ்... இப்போ இந்த சட்டையோட கையை கூட என்னால மடிச்சி விட முடியாது... எப்படித் தான் இதை கட்டிக்கிட்டு வேலையெல்லாம் செய்யறாங்களோ தெரியல..." என்று புலம்பியபடி வெளியே வந்தவன், இந்துவை பார்த்து சிலையாகி போனான்.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now