பாகம் 24
சிலைபோல் நின்றிருந்தான் அர்ஜுன். இந்து அவனை முத்தமிட்டுவிட்டாள்... எதற்காக? தன் நெற்றியை தொட்டுப் பார்த்து புன்னகைத்தான் அர்ஜுன். அவளை அவன் கட்டிலில் படுக்க வைத்ததற்காக இருக்கலாம்... அவள் சந்தோஷமாக இருக்கும் போதெல்லாம் முத்தமிடுவாளோ...? பைத்தியக்காரி... என்றெண்ணி சிரித்தான்.
முழுதும் தயாரான நிலையில், உணவு மேஜைக்கு வந்தான் அர்ஜுன். வாழ்வில் என்றும் கண்டிராத ஒரு நறுமணம், சமையலறையிலிருந்து வந்து அவன் மூக்கை துளைத்தது. அவனுக்கு மிகவும் பிடித்த, பூரியும், பட்டாணி குருமாவும் தயாராவது போல் தெரிகிறது. ஆனால், அது வேலனின் வழக்கமான கைவண்ணத்தின் மணமாக தெரியவில்லை. சமைப்பது யார்? இந்துவா...? வேலனுக்கு பதிலாக, இந்து உணவு கொண்டு வருவதை பார்த்து ஆச்சரியம் அடைந்தான் அர்ஜுன். ஏனென்றால், அவனுக்கு முத்தமிட்ட பின் அவள் அவன் முன் வரமாட்டாள் என்று நினைத்துக் கொண்டிருந்தான் அவன். ஒன்றுமே நடக்காதது போல், அவனுக்கு, சகஜமாய் உணவு பரிமாறினாள் இந்து. முதல் வாய் உணவை எடுத்து வைத்த உடனேயே அவனுக்கு புரிந்து போனது, அது வேலன் சமைத்த உணவு அல்ல என்பது. அதன் தனிச்சுவைத்திறம் அலாதியாய் இருந்தது.
"யார் சமைச்சது?" என்றான் முகத்தில் எந்த பாவமும் இன்றி.
"மிஸஸ் இந்துகுமாரி அர்ஜுன்" என்று அவள் கூற,
புன்னகைத்து விடாமல் இருக்க படாத பாடு பட்டான் அர்ஜுன். அவனுக்குப் பூரியும், பட்டாணி குருமாவும் பிடிக்கும் என்று தெரிந்து தான் அவள் செய்தாளா? ஆனால், அவளுக்கு எப்படி தெரிந்தது?
"நீ ஏன் சமைச்ச? உன்னை யாரு சமைக்க சொன்னது?"
"என்னோட மாமியார் தான்..."
என்று அவள் கூற திகைத்துப் போனான் அர்ஜுன்.
"நேத்து ராத்திரி என் கனவுல வந்து, அவங்க தான் சொன்னாங்க"
*புளுகு மூட்டை* என்பது போல் அவளை நோக்கி ஒரு பார்வையை வீசினான் அர்ஜுன்.