பாகம் 16
வித்யா மீதும், வீணா மீதும், தன் பார்வையால் நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தார் மாஷா. வீணா பொறாமையால் புழுங்கிக் கொண்டிருக்க, வித்யாவாலோ தன் கண்களையே நம்ப முடியவில்லை. என்ன நடக்கிறது இங்கே? இந்து அவனை கட்டி அணைக்க மட்டும் செய்யவில்லை, அவன் நெற்றியில் முத்தமும் கொடுத்தாள். அவள் எப்படி அதை செய்யலாம்? ஒருவேளை அவள் அவனுடைய வலையில் விழுந்து விட்டாளோ? அப்படி என்றால் மாஷாவுடைய திட்டத்தை அவர் எப்படி நிறைவேற்ற முடியும்?
வித்யாவையும் வீணாவையும் விட, மாஷா தான் அதிகமாய் கலவரப்பட்டு போனார். அர்ஜுனுடைய கதையை சுலபமாக முடித்து விடலாம் என்று அவர் தப்புக் கணக்குப் போட்டிருந்தார். ஆனால், இங்கு அனைத்தும் நேர்மாறாக நடந்து கொண்டிருக்கிறது. அவருக்கு எரிச்சல் ஏற்பட்டது. அவருடைய துஷ்ட மனம், பரபரவென வேலை செய்தது. அந்த விஷயத்தில் இருக்கும் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்தது.
ஆமாம்... இந்துவிற்கு அவன் மீது விருப்பம் இல்லாமல் இருந்திருந்தால், அவனுக்கு அதிகமாய் பாதிப்பு ஏற்படாது. ஆனால் இப்பொழுது, அவருடைய திட்டம் அர்ஜுனின் இதயத்தை நிச்சயம் கூறு போட்டுவிடும். ஏனென்றால் இப்போது உறவுவின், பழத்தின் சுவையை அவனுக்கு காட்டிவிட்டாள் இந்து. மாஷாவின் முகத்தில் ஏற்பட்ட சிரிப்பில், கருநாகத்தின் உஷ்ணம் தெரிந்தது
தன் கையிலிருந்து ஒரு கோடி ரூபாய் நழுவி விடுகிறதே என்ற பயத்தில், மாஷாவின் முகத்தை பார்த்தார் வித்யா. அவர்களை காரில் அமரும்படி கூறினார் மாஷா. அவர்கள் அமரவும், அங்கிருந்து தன் காரை கிளப்பிக் கொண்டு சென்றார்.
சற்று தூரம் வந்த பின், சாலையின் ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு விளக்கினார்.
"இந்து அர்ஜுனை விரும்புறான்னு நல்லா தெரியுது. அவ இனிமே நம்மளுடைய திட்டத்திற்கு உதவ மாட்டா." என்றார் மாஷா.
"நான் சொன்னா அவ நிச்சயம் கேட்பா" என்றார் வித்யா.
"இல்லை. நம்மளுடைய திட்டம் அவளுக்கு தெரிய வேண்டாம். அவ அர்ஜுனுடன் நெருக்கமாக இருக்கட்டும்"