பாகம் 34
இந்து, தன்னிடம் பேசாததால் வருத்தமடைந்தார் சங்கர். அவள் ஏன் பேசவில்லை என்பதும் அவருக்கு தெரியும். அவரைப் பற்றியும், அவர் என்ன செய்தார் என்பது பற்றியும், அர்ஜுன் அவளிடம் கூறி இருக்க வேண்டும். தான் எவ்வளவு கீழ்த்தரமானவன் என்று அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவள் அர்ஜுனின் பேச்சைக் கேட்டு நடப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆம், தன்னிடம் பேச வேண்டாம் என்று, அர்ஜுன் கட்டளையிட்டு இருப்பான். அதனால் தான் அவள் அவரிடம் பேசவில்லை. அவள் ஹீனாவிடமாவது பேசுகிறாளே அது வரை சந்தோஷம் தான்.
இந்து போன் செய்து விஷயத்தை பற்றி ஹீனாவிடம் கூறினார் சங்கர். அவள் உடனடியாக இந்துவுக்கு போன் செய்தாள்.
நகத்தைக் கடித்தபடி பதற்றத்துடன் அமர்ந்திருந்தாள் இந்து. சங்கரிடம் பேசியதற்காக அவள் பதற்றமாக இல்லை... விஷயத்தை எப்படி ஹீனாவுக்கு சொல்வது என்பதில் தான் அவளுக்கு பதற்றமே. போன் செய்தால் தான் சங்கர் எடுத்து பேசுகிறாரே... பிறகு அவள் எப்படி ஹீனாவுக்கு விஷயத்தை சொல்வது? என்று யோசித்தபடி அமர்ந்திருந்தாள்.
"ஹீனா பேசுறேன், அண்ணி" என்று ஹீனாவின் குரலைக் கேட்டவுடன், அவளுக்கு அப்பாடா என்று இருந்தது.
"நல்ல காலம் நீ எனக்கு போன் பண்ணிட்ட... உனக்கு எப்படி விஷயத்தை சொல்றதுன்னு நான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்" என்றாள் இந்து.
மறுபடியும் போன் செய்தால், சங்கரிடம் பேச வேண்டி வருமே என்ற தயக்கத்துடன் இந்து இருந்ததை உணர்ந்து கொண்டாள் ஹீனா.
"ஏதாவது முக்கியமான விஷயமா, அண்ணி?"
"என்னோட வீட்டுக்காரர், வர்ற ஞாயிற்றுக்கிழமை, எங்க கல்யாண ரிசப்ஷனுக்கு ஏற்பாடு பண்ணி இருக்காரு. அதுக்கு உன்னை கூப்பிட தான் போன் பண்ணேன்" என்றாள் இந்து.
தன்னை அழைக்க, இந்துவுக்கு அர்ஜுன் சம்மதம் கொடுத்து விட்டான் என்பதை நம்பவே முடியவில்லை ஹீனாவால். அர்ஜுனிடம் அனுமதி பெற்றுத் தான் இந்து தன்னை அழைக்கிறாள் என்பதை புரிந்து கொள்வது பெரிய கம்ப சூத்திரம் ஒன்றும் இல்லை. அர்ஜுனிடம் அனுமதி பெறாமல் இந்து தன்னை அழைக்க மாட்டாள் என்று ஹீனாவுக்கு தெரியும்.